இன்ஸ்டகிராம் காதலால் +1 மாணவிக்கு நேர்ந்த கதி.. கன்னியாகுமரியில் பரபரப்பு..

 
இன்ஸ்டகிராம் காதலால் +1 மாணவிக்கு நேர்ந்த கதி..  கன்னியாகுமரியில் பரபரப்பு..

கன்னியாகுமரியில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி,  பிளஸ் 1  மாணவியிடம்  அத்துமீறி நடந்துகொண்ட  இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த  17 வயது மாணவி ஒருவர்  அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 11ம்  வகுப்பு படித்து வருகிறார்.  இந்த மாணவிக்கு  இன்ஸ்டாகிராம் மூலமாக வடமாவட்டத்தை சேர்ந்த தினேஷ் என்கிற  இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.   இன்ஸ்டாகிராம் மூலமாகவே காதலை வளர்த்துக் கொண்ட  மாணவியிடம்,   அந்த இளைஞர் நேரில் சந்திக்க வேண்டும் என கேட்டிருக்கிறார். தான் கன்னியாகுமரிக்கு வருவதாகவும்,  மாணவியையும் அங்கு  வருமாறும் தினேஷ்  அழைத்திருக்கிறார்.  இதனையடுத்து அந்த மாணவியும்,  வீட்டில் யாருக்கும் தெரியாமல் பள்ளி செல்வதாக கூறிவிட்டு அந்த இளைஞரை சந்திக்க கன்னியாகுமரி சென்றுள்ளார்.

instagram

அங்கு  சென்றதும் தினேஷை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட பேசியபோது,  அங்குள்ள லாட்ஜ் ஒன்றில் இருப்பதாகவும் அங்கு வருமாறும் அழைத்திருக்கிறார்.   மாணவியும் உடனே அந்த லாட்ஜுக்கு சென்றிருக்கிறார். அங்கு இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது தினேஷ்,  மாணவியிடம் ஆசை வார்த்தைகளை கூறி  அத்துமீறி நடந்துகொண்டதாக தெரிகிறது.   அதன் பிறகு அந்த இளைஞரும் சென்றுவிடவே,  மாணவியும் எப்போதும் போல வீட்டிற்கு வந்துள்ளார்.  ஆனால் அதன் பிறகு தினேஷ்  மாணவியுடன்  பழகுவதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் மனவருதத்தில் இருந்த மாணவி பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறி அழுதிருக்கிறார்.

கைது

  இதனையடுத்து  பெற்றோர் உடனடியாக கன்னியாகுமரி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.  அதன்பேரில் தினேஷை  பொறிவைத்து பிடிக்க முடிவு செய்த போலீசார்,  மாணவியை மீண்டும் அந்த இளைஞரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசுமாறு கூறியிருக்கின்றனர்.  பலமுறை முயற்சித்த பின் அந்த இளைஞர் மாணவியுடன் பேசியிருக்கிறார். அப்போது மீண்டும் கன்னியாகுமரிக்கு சந்திக்க வருமாறு அந்த மாணவி கூறியதன் பேரில் தினேஷும் அங்கு வர ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து போலீசார் ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடியே கன்னியாகுமரிக்கு வந்த தினேஷை கையும் களவுமாக பிடித்தனர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.