500 மதுபானக் கடைகள் மூடல் - ஜுன் 3ல் அறிவிப்பு
டாஸ்மாக் கடைகள் எண்ணிக்கையை படிப்படியாக குறைக்க அரசியல் கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த சூழலில் சட்டப்பேரவையில் அண்மையில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அறிவித்தார்.
இந்நிலையில் வருகிற ஜூன் 3ம் தேதி கருணாநிதி பிறந்த நாளில் 500 மதுபான கடைகளை மூடுவது தொடர்பாக முதலமைச்சர் அறிவிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மூடப்படும் மதுபான கடைகளின் பட்டியலை தயார் செய்து டாஸ்மாக் நிர்வாகம் அரசுக்கு அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு முழுவதும் தற்போது 5029 மதுபான கடைகள் செயல்பட்டு வரும் நிலையில் டாஸ்மாக் மூலம் மாநில அரசுக்கு கடந்த 2021- 22இல் 36 ஆயிரத்து 56 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. நடப்பாண்டில் டாஸ்மாக் வருவாய் 44 ஆயிரத்து 98 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த சூழலில் பள்ளி, கல்லூரிகள், கோயில்கள் அருகே உள்ள 500 மதுபான கடைகளை மூட அரசு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும் 500 மதுபான கடைகள் மூடப்பட்டன என்பது கவனிக்கத்தக்கது.