காவல்துறை மரியாதையுடன் வாணி ஜெயராம் உடல் அடக்கம் செய்யப்படும் - முதலமைச்சர் அறிவிப்பு

 
mk Stalin and vani

காவல்துறை மரியாதையுடன் வாணி ஜெயராம் உடல் அடக்கம் செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் சென்னையில் உள்ள தனது வீட்டில் காலமானார். அவருக்கு வயது (78).  படுக்கை அறையில், கீழே விழுந்து நெற்றியில் அடிபட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. வாணி ஜெயரம் கடந்த 1971 ம் ஆண்டு இந்தியில் வெளிவந்த "குட்டி"படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.  தமிழில் 1974 ஆம் ஆண்டு வெளியான ‘தீர்க்கசுமங்கலி’ படத்தில் இடம்பெற்ற ‘மல்லிகை என் மன்னன் மயங்கும்’பாடம் மூலம் அறிமுகமானார்.  தமிழ், தெலுங்கு, இந்தி, பெங்காலி என 18 மொழிகளில்  10,000 மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார்.  அண்மையில் தான்  வாணி ஜெயராமுக்கு  மத்திய அரசு பத்மபூஷன் விருதை அறிவித்திருந்தது. இந்நிலையில், மறைவு  திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சென்னையில் உள்ள ஓமத்தூரார் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து, அவரது உடல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. சென்னை பெசண்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் இன்று தகனம் செய்யப்படவுள்ளது. 

vani jayaram

இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியதாவது:,  பல்வேறு மொழிகளில் 10,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி சாதனை படைத்தவர் வாணி ஜெயராம். அவரது மறைவால் திரையுலகமே அதிர்ச்சியில் உள்ளது. 

 பத்மபூஷன் விருதை பெறும் முன்னரே வாணி ஜெயராம் எதிர்பாராதவிதமாக மறைந்தார். வாணி ஜெயராமின் குடும்பத்தினர், ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். காவல்துறை மரியாதையுடன் வாணி ஜெயராம் உடல் அடக்கம் செய்யப்படும். இவ்வாறு கூறினார்.