கீழடியில் 9-ம் கட்ட அகழாய்வு பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 
MK Stalin

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 9-ம் கட்ட அகழாய்வு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் பழங்காலத்தில் தமிழர்கள் வாழ்ந்த தொல்பொருட்கள் தென்பட்டன. இதனையடுத்து அங்கு அகழாராய்ச்சி நடத்த தமிழக அரசு முடிவு செய்து அகழாய்வு நடத்தப்பட்டது. கடந்த 2015-ம் ஆண்டு முதல் அங்கு அகழாய்வு நடைபெற்று வந்தது. இதுவரை 8 கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்றுள்ளன. இந்நிலையில், அகழாய்வின் போது பழங்கால தமிழர்கள் பயன்படுத்திய தொல்பொருட்கள் ஏராளமாக கிடைத்தன. இவை அனைத்தும் 2600 ஆண்டுகள் பழமையானவை என ஆய்வுகளின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அகழாய்வு பணிகளின்போது கிடைத்த தொல்பொருட்கள் ரூ.18.42 கோடியில் கட்டப்பட்டுள்ள அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகத்தை கடந்த மாதம் 5-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் திறந்து வைத்து பார்வையிட்டார். அதனை தொடர்ந்து கீழடியை பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.  

இதனிடையே கீழடி, அகரம், கொந்தகை என 3 இடங்களில் 9-ம் கட்ட அகழாய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் கீழடியில் 9-ம் கட்ட அகழாய்வு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் இருந்தவாறு கீழடியில் 9-ம் கட்ட அகழாய்வு பணிகளை தொடங்கி வைத்தார். இதேபோல் கீழடி அருங்காட்சியகத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ள புனை மெய்யாக்க செயலியையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.