உ.வே. சாமிநாதையரின் பிறந்தநாள் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்படும் - முதலமைச்சர் அறிவிப்பு

 
mk stalin

வரக்கூடிய காலக்கட்டங்களில் டாக்டர் உ.வே. சாமிநாதையரின் பிறந்தநாள், தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், வினாக்கள்-விடைகள் நேரத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறுக்கிட்டு அளித்த பதில்: பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் திரு. கே.பி.முனுசாமி அவர்கள் இங்கே ஒரு கோரிக்கையை வைத்து, அந்தத் துறையினுடைய அமைச்சர் அவர்களும் அதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார்கள். டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்களின் பிறந்தநாளை தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாகக் கொண்டாட வேண்டுமென்று அவர் ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும் பரிசீலிக்க வேண்டுமென்று கேட்டிருக்கிறார்கள்.


அவருடைய கோரிக்கையை ஏற்று, நிச்சயமாக வரக்கூடிய காலக்கட்டங்களில் டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்களின் பிறந்தநாள், தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாகக் கொண்டாடப்படும் என்பதை நான் உங்கள் மூலமாகத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேநேரத்தில், இன்று நம்முடைய மாண்புமிகு துணை சபாநாயகர் திரு. கு.பிச்சாண்டி அவர்களின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை உங்கள் அனைவரின் சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.