நீட் மசோதா - ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வலியுறுத்தல்!

 
govt


நீட் விலக்கு மசோதாவை உடனடியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வு முறையானது,  ஏழை, எளிய கிராமப்புற  மாணவர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளதா? என்பது குறித்தும் அவ்வாறு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை களையும் வகையில்,  அனைவருக்கும் பயனளிக்கக்கூடிய நியாயமான மாணவர் சேர்க்கை முறையை நடைமுறைப் படுத்துவது குறித்து ஆராய்ந்து தக்க பரிந்துரைகளை அளித்திட நீதியரசர் ஏ கே ராஜன் தலைமையில் குழு ஒன்றை தமிழக முதலமைச்சர் அமைத்தார்.

ravi stalin

இக்குழுவானது நீட் தேர்வு பற்றி பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்டு அறிந்து ,மாணவர் சேர்க்கை பற்றிய தகவல்களை தீர ஆராய்ந்து, சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை விளக்கி , இந்த பாதிப்புகளை அகற்றும், மாணவர் சேர்க்கை முறையை நடைமுறைப்படுத்துவது குறித்து தனது பரிந்துரைகளை அரசுக்கு அளித்தது. 

இந்தக் குழுவின் பரிந்துரைகளின் படி கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்நாடு இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை. சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டது.  இச்சட்ட முன்வடிவு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. 

stalin

மருத்துவ மாணவர் சேர்க்கையில் தமிழ் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பின் தன்மையை கருத்தில் கொண்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறும் பெறும், பொருட்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட, சட்ட முன்வடிவை உடனடியாக குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தமிழக ஆளுநரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.  இந்த சந்திப்பின் போது தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.