மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

 
stalin

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். 

கடந்த 3 தினங்களுக்கு முன்னர் தென்மாவட்டங்களில் பெய்த கொடூர மழையால் தென்மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. உடுத்திய துணி தவிர மாற்று துணிகளுக்கு கூட வழி இல்லாத நிலைமையை வெள்ளம் உருவாக்கியது.  வீடுகளில் உள்ள பொருட்கள் அடித்து செல்லப்பட்டும், வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டும் வீணடிக்கப்பட்டு விட்டது.  வீடுகளில் வளர்த்து வந்த கால்நடைகள் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு மிகப்பெரிய பொருளாதார பின்னடைவை ஏற்படுத்திவிட்டது.  அடுத்தவேளை சாப்பாட்டுக்கு என்ன செய்வதென்று தெரியாத நிலைமையில் தென்மாவட்ட மக்கள் உள்ளனர். அரசு சார்பில் நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுகள் தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் ஆய்வு பணிகளை மேற்கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்தடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று மக்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். ஆய்வு பணியின் போது தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.