இந்த ஆட்சி வாக்களித்தவர்களுக்கு மட்டுல்ல, வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்துதான் - முதலமைச்சர் பேச்சு!

 
stalin

இந்த ஆட்சி வாக்களித்தவர்களுக்கு மட்டும் அல்ல, வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்துதான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்ற நிலையில், திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. இதனிடையே திமுக அரசு தமிழகத்தில் ஆட்சி அமைத்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதனை கொண்டாடும் விதமாக திமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று திமுக அரசின் 2 ஆண்டுகள் சாதனை கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் ஈடில்லா ஆட்சி ,ஈராண்டே சாட்சி என்ற சாதனை மலரையும் வெளியிட்டார். இந்நிலையில், தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி மற்றும் அண்ணா நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அவருடன் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு, பொன்முடி, டி.ஆர்.பாலு உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: இந்த ஆட்சி வாக்களித்தவர்களுக்கு மட்டும் அல்ல, வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்துதான். இரண்டு ஆண்டுகளாக இந்த ஆட்சிக்கு கொடுத்த ஒத்துழைப்பை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கொடுக்க வேண்டும். விமர்சனங்களை பற்றி கவலைப்படமாட்டேன், நல்லவைகளை எடுத்துக்கொள்வேன், கெட்டவைகளை புறம் தள்ளுவேன். இவ்வாறு அவர் கூறினார்.