வி.பி.சிங் ஏற்றி வைத்த சமூகநீதி தீபம் என்றும் அணையாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

 
Stalin

வி.பி.சிங் மறையலாம் ஆனால் அவர் ஏற்றி வைத்த சமூகநீதி தீபம் என்றும் அணையாது என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் மேனாள் இந்தியப் பிரதமர், சமூக நீதிக் காவலர் திரு. வி.பி. சிங் அவர்களின் முழு திருவுருவச்சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (27.11.2023), சென்னை, மாநிலக் கல்லூரி வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் 52 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள மேனாள் இந்தியப் பிரதமர், சமூக நீதிக் காவலர் திரு.வி.பி. சிங் அவர்களின் முழு திருவுருவச் சிலையை சிறப்பு விருந்தினரான உத்தர பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் திரு. அகிலேஷ் யாதவ், திரு. வி.பி. சிங் அவர்களின் துணைவியார் திருமதி சீதா குமாரி, மகன் திரு. அஜயா சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் முன்னிலையில் திறந்து வைத்தார். 

tn

இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: வி.பி.சிங் முயற்சியால்தான் பிற்படுத்தப்பட்ட மக்கள் ஓரளவு முன்னேறி இருக்கிறார்கள். மத்திய அரசின் துறை செயலாளர்கள் 89 பேரில் 85 பேரும், மத்திய அரசின் கூடுதல் செயலாளர்கள் 93 பேரில் 88 பேரும் உயர்ஜாதியினர். மத்திய பல்கலைக் கழகங்களில் இதுவரை இடஒதுக்கீடே இல்லை. நீதிமன்றங்களில் 2018 முதல் 2023 வரை நியமிக்கப்பட்ட 604 நீதிபதிகளில் 74 பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்டவர்கள். அரசு துறைகளில் பதவி உயர்வின்போது இடஒதுக்கீடு அமல்படுத்தப்படுவதில்லை. மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின, பழங்குடியின மற்றும் சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீடு முழுமையாக, முறையாக வழங்கப்பட வேண்டும். வி.பி.சிங் மறையலாம். ஆனால் அவர் ஏற்றி வைத்த சமூகநீதி தீபம் என்றும் அணையாது. தமிழ்நாடு என்றும் அவரை மறக்காது, மறக்காது. இவ்வாறு கூறினார்.