ஆட்சிக்கே ஆபத்து வந்தாலும் கொள்கையில் உறுதியோடு நிற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

 
mk stalin

நமது ஆட்சிக்கு ஆபத்து வந்தாலும் அதை குறித்து கவலைப் பட வேண்டாம், கொள்கையில் உறுதியோடு இருப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

திராவிட இயக்க எழுத்தாளர் திருநாவுக்கரசுவின் இல்ல திருமண விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதனை தொடர்ந்து திருண விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியாதாவது: 2014ம் ஆண்டு ஆட்சிக்கு வரும் போது கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றையாவது பாஜக நிறைவேற்றியதா? ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என சொன்னதை செய்யவில்லை. கருப்பு பணத்தை மீட்டு ஒரு குடும்பத்திற்கு 15 லட்சம் தருவேன் என சொன்னார்கள், ஆனால் இதுவரை 15 ரூபாய் கூட தரவில்லை. 

சர்வாதிகார ஆட்சியை அப்புறப்படுத்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளோம். யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை விட, யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். ஆட்சிக்கே ஆபத்து வந்தாலும் கொள்கையில் உறுதியோடு நிற்போம். நமது ஆட்சிக்கு ஆபத்து வந்தாலும் அதைக் குறித்து கவலைப் பட வேண்டாம், கொள்கையில் உறுதியோடு இருப்போம். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.