புளுகு மூட்டையை அவிழ்த்து விடுகிறார் பழனிசாமி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
ஆட்சியில் இருந்த காலத்தில் மக்கள் நலனைப் பற்றி கவலைப்படாத எடப்பாடி பழனிசாமி, இப்போது திராவிட மாடல் அரசை பற்றி அவதூறு கருத்துக்களை உளறி வருகிறார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 2 நாள் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். நேற்று கன்னிச்சேரிபுதூர் பட்டாசு ஆலையில் கள ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பட்டாசு தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார். இன்று குமாரசாமி ராஜா நகரில் ₹77.12 கோடி மதிப்பீட்டில் 6 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள புதிய ஆட்சியர் அலுவலக கட்டடத்தை திறந்து வைத்தார். புதியதாகக் கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைத் திறந்து வைத்து, ஆட்சியரை நாற்காலியில் அமர வைத்து வாழ்த்தினார்.
இதனை தொடர்ந்து நடைபெற்ற விழாவில் பேசிய முதலமைசர் மு.க.ஸ்டாலின், ஆட்சியில் இருந்த காலத்தில் மக்கள் நலனைப் பற்றி கவலைப்படாத எடப்பாடி பழனிசாமி, இப்போது திராவிட மாடல் அரசை பற்றி அவதூறு கருத்துக்களை உளறி வருகிறார். பொய் சொல்லலாம். ஏக்கர் கணக்கில் சொல்லக்கூடாது என்று ஒரு சொல் வழக்கு உண்டு. ஆனால் அதனை இப்போது மாற்றி, பொய் சொல்லலாம் ! பழனிசாமி அளவுக்கு சொல்லக்கூடாது” என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு புளுகு மூட்டையை அவிழ்த்து விடுகிறார் பழனிசாமி என கூறினார்.


