தந்தை பெரியார் திருவுருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

 
MK Stalin

மனிதநேயத்தையும் சுயமரியாதையையும் அடிப்படையாகக் கொண்ட அரசியலை வலியுறுத்திய மாபெரும் சீர்திருத்தவாதி தந்தை பெரியார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். 

தந்தை பெரியாரின் 145வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தலைவர்கள் பலரும் பெரியாருக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர். இந்த நிலையில், தந்தை பெரியாரின் பிறந்த நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது திருவுருவ புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வேலூர் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு முன்பு வைக்கப்பட்டுள்ள பெரியாரின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். 


இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், அவர் வாழ்வே ஓர் அரசியல் தத்துவம். மொழி, நாடு, மதம் போன்றவற்றைக் கடந்து - மனிதநேயத்தையும் சுயமரியாதையையும் அடிப்படையாகக் கொண்ட அரசியலை வலியுறுத்திய மாபெரும் சீர்திருத்தவாதி அவர். தாம் எண்ணியவை எல்லாம் சட்டவடிவம் பெறுவதைப் பார்த்துவிட்டே மறைந்த பெருமை அவருக்கே உரித்தானது. பெண் விடுதலைக்காகவும் சமத்துவச் சமுதாயத்துக்காகவும் நாம் இன்று தீட்டும் திட்டங்களுக்கெல்லாம் அடிப்படை பெரியாரியலே. பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் ஆட்சியைப் போன்றே இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் ஆட்சியும் எம் தந்தை பெரியாருக்கே காணிக்கை. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.