"உயர்கல்விக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசே செய்து தரும்" - முதல்வர் ஸ்டாலின்

 
ttn

+2 பொதுத்தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் எடுத்த திண்டுக்கல் மாணவி நந்தினி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

பள்ளிக்கல்வித் துறையால் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்றைய தினம் வெளியிடப்பட்டது. இத்தேர்வில் மாநிலம் முழுவதும் 94.03 சதவிகிதம் மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 96.38 சதவிகிதமும், மாணவர்கள் 91.45 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். திண்டுக்கல், அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் வணிகவியல் மாணவி செல்வி ச. நந்தினி அனைத்து பாடங்களிலும் முழு மதிப்பெண்னான 600-க்கு 600 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதல் இடம் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். 

student

இந்த சூழலில் மாணவி செல்வி ச. நந்தினி   தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை தன் பெற்றோர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியையுடன் இன்றையதினம் முகாம் அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அப்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அம்மாணவியிடம் உயர்கல்வி பயில்வதற்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ""கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து" என்று பல நிகழ்ச்சிகளிலும் நான் கூறி வருகிறேன். 



நேற்று வெளியான +2 பொதுத்தேர்வு முடிவில் 600/600 பெற்றுச் சாதனை படைத்துள்ள மாணவி நந்தினியும் "படிப்புதான் சொத்து என்று நினைத்துப் படித்தேன்" எனப் பேட்டியில் கூறியதைக் கண்டு பெருமையடைந்தேன். அவரை இன்று நேரிலும் அழைத்து வாழ்த்தினேன். அவரது உயர்கல்விக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நமது அரசே செய்து தரும் என்ற உறுதியையும் வழங்கியுள்ளேன்.

எளிய குடும்பப் பின்னணி கொண்ட நந்தினி போன்றோர் தங்கள் உழைப்பால் அடையும் உயரங்கள்தான் நம் தமிழ்நாட்டின் அடையாளம்!

"அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்" " என்று பதிவிட்டுள்ளார்.