வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை - முதலமைச்சர் எச்சரிக்கை
வட மாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த சில தினங்களாக தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வீடியோ பரவி வருகிறது. இது ஒருசிலருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அந்த வீடியோ உண்மை கிடையாது என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், திருப்பூர், மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் பணிபுரிந்துவரும் வடமாநில தொழிலாளர்கள் மொத்தமாக தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ரெயில் நிலையங்களில் குவிந்துள்ளனர். அவர்கள் அதிக அளவில் தமிழகத்தை விட்டு வெளியேறி வருவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில், வட மாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வேறு மாநிலங்களில் நடைபெற்ற சம்பவங்களின் வீடியோக்களை தமிழ்நாட்டில் நடைபெற்றதாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வெளி மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்திகளை பரப்புவர்கள் இந்திய நாட்டிற்கு எதிரானவர்கள். சமூக ஊடகங்களில் இப்படி கீழ்தரமாக சிலர் அரசியல் செய்வது கடும் கண்டனத்திற்குரியது. வேண்டும் என்றே வதந்தி பரப்பி அச்சத்தையும் பீதியையும் பரப்புவர்கள் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.வட மாநில தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் எந்த பாதிப்பும் நேராது. வட மாநில தொழிலாளர்கள் எவ்வித அச்சமும் அடைய வேண்டாம்" என்று தெரிவித்துள்ளார்.