நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரிக்கு கீழடி புத்தகத்தை வழங்கி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!!
சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாகமுனீஸ்வர் நாத் பண்டாரி இன்று பதவி ஏற்றார் . அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த இவர், சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக கடந்த நவம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். உச்ச நீதிமன்றம் கொலிஜியம் பரிந்துரையின்படி இவர், தற்போது குடியரசுத் தலைவரின் உத்தரவின் பேரில் புதிய தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட நீதியரசர் முனீஸ்வர் நாத் பண்டாரிக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மலர்கொத்து வழங்கினார். பின்னர் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்த மு.க.ஸ்டாலின் தமிழக அரசு வெளியிட்ட கீழடி புத்தகத்தை அளித்தார்.
மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட நீதியரசர் திரு. முனீஸ்வர் நாத் பண்டாரி அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களுக்கு மலர்கொத்து வழங்கினார். pic.twitter.com/3tqD0W7ePP
— CMOTamilNadu (@CMOTamilnadu) February 14, 2022
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள முனீஷ்வர்நாத் பண்டாரி வரும் செப்.12ஆம் தேதி ஓய்வு பெறவுள்ளார். முன்னதாக சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்த சஞ்சீவ் பானர்ஜி மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.