மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3000 கோடி கடனுதவி திட்டம் - நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர்..
மகளிர்சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3,000 கோடி கடனுதவி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கிவைக்கிறார்.
இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில்தான் மகளிர் சுய உதவிக் குழு திட்டம் தொடங்கப்பட்டது. 1989 ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி இந்தத் திட்டத்தை அறிமுகப்படுஹ்தினார். தமிழகத்தில் இதுவரை 7.25 லட்சம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் இந்த திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 1 கோடிக்கும் அதிகமாகன பெண்கள் உறுப்பினர்களாக இருந்து பயனடைந்து வருகின்றனர். இந்தக் குழுக்களுக்கு அரசு மூலம் ஒவ்வொரு ஆண்டும் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் பெண்கள் தையல், ஊதுவத்திகள், மெழுகுவர்த்தி, கைவினைப்பொருட்கள் தயாரிப்பது உள்ளிட்ட பல்வேறு சுய தொழில் தொடங்கி தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள ஏதுவாக அமைகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு மகளிர் குழுக்களுக்கு ரூ.20ஆயிரம் கோடி கடனுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி இதுவரை 10 ஆயிரம் கோடி ரூபாய் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனாக வழங்கப்பட்டுள்ளது.
தற்போது மேலும் ரூ.3000 கோடி கடனுதவி வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தினை நாளை(14-ந்தேதி) முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்க இருக்கிறார். இதற்கென திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நிகழ்ச்சி நடத்த பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த விழாவில் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ஸ்டாலின் கடனுதவி வழங்க இருக்கிறார். மேலும் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி முதலமைச்சர் சிறப்புரையாற்ற உள்ளார்.