பொள்ளாச்சி அருகே இருசக்கர வாகனம் மோதி தேங்காய் வியாபாரி பலி!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே இருசக்கர வாகனம் மோதி தேங்காய் வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளி, காளி பாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன்(53). இவர் அதே பகுதியில் தேங்காய் வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில், வெங்கடேசன் நேற்று மீன்கரை- பொள்ளாச்சி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். சீனிவாசபுரம் மேம்பாலம் அருகே சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் வெங்கடேசன் மீது அதிவேகமாக மோதி விபத்திற்குள்ளானது.
இதில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் வெங்கடேசனை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் பேரில் பொள்ளாச்சி மேற்கு போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த ஜமீன் ஊத்துக்குளியை சேர்ந்த தனுஷ் (20) என்பவரை கைது செய்தனர்.