கோவை கோகுல் கொலை வழக்கு : மேலும் 3 பேர் கைது..
கோவையில் நீதிமன்றம் அருகே நேற்று முன்தினம் கோகுல் என்கிற இளைஞர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோகுல் கொலை வழக்கில் ஏற்கனவே 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவையில் நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றிற்காக ஆஜராக வந்த 2 இளைஞரகளை மர்ம கும்பல் துரத்தி வெட்டியது. இதில் கோகுல் என்கிற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நீதிமன்றம் பின்புறம் நடத்த இந்த கொலை சம்பவம் கோவையில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தவும், கொலையாளிகளை கைது செய்யவும் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் 8 தனிப்படை அமைக்கப்பட்டது. போலீஸார் அதிரடி வேட்டையில் இறங்கிய நிலையில், நேற்று நீலகிரியில் ஜோஸ்வாக், கௌதம், பரணி, சௌந்தர், அருண்குமார், டேனியல் ஆகிய 7 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டனர்.
அங்கிருந்து கோவை அழைத்து வரப்பட்ட நிலையில் மேட்டுப்பாளையம் அருகே வந்தபோது, இயற்கை உபாதை கழிக்க வேண்டும் எனக்கூறி இறங்கி பின்னர் காவல்துறையினரை தாக்க முயன்றுள்ளனர். இதில் 2 பேரை காவல்துறையினர் சுட்டு பிடித்தனர். காயமுற்ற 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 5 பேர் காவல்நிலையத்தில் உள்ளனர். இதனிடையே, சம்பவம் குறித்து இன்று காலை 3 பேரை பிடித்து தனிப்படை போலீஸ் விசாரணை நடத்தினர்.
விக்னேஷ், விக்ரம் உள்பட விசாரணை நடத்திவந்த 3 பேரையும் தனிப்படை போலீஸ் கைது செய்துள்ளது. கொலை செய்துவிட்டு தப்பியோட இருசக்கர வாகனம் கொடுத்து உதவியதாக 3 பேர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தவழக்கை பொறுத்தவரை இதுவரையில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் அனைவரும் விரைவில் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.