கோவை: மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி
கோவையில் கனமழை பெய்ததால் சாலையோரம் இருசக்கர வாகனத்தை நிறுத்த முயன்ற ஒருவர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு முழுவதிலும் பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில் கோவை மாவட்டத்தில் நேற்று இரவு கன மழை பெய்தது. இதன் காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. இந்த சூழலில் கோவை ரயில் நிலையம் அருகே சாலை பணிகள் நடைபெற்று வருவதால், சாலை மேடு பள்ளமாக காட்சியளிக்கிறது. ஒரு வழி போக்குவரத்து மட்டுமே செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் சாலை ஓரத்தில் மழை நீர் சூழ்ந்து காணப்பட்டது.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் வாகனத்தை சாலை ஓரம் நிறுத்திவிட்டு அருகில் உள்ள கட்டிடத்திற்கு செல்ல முயன்ற போது இருவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் ஒருவர் தப்பித்த நிலையில், மற்றொருவர் சாலையில் உள்ள பள்ளத்தில் கால் சிக்கியதால் அங்கேயே கீழே விழுந்துள்ளார். மின்சாரம் அவர் மீது பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். மற்றொருவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலராக பணியாற்றி வரும் செல்வராஜ் என்பது தெரியவந்துள்ளது.