டெல்டாவில் பயிர்சேதங்களை ஆய்வு செய்ய அமைச்சர்கள் குழு - முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!!
மழை வெள்ளத்தை பாதித்த டெல்டா மாவட்டங்களில் பயிர் செய்த விவரங்களை பார்வையிட்டு அறிக்கை அளிக்க அமைச்சர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பல மாவட்டங்கள் தண்ணீரில் மிதக்கின்றன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதோடு நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. அத்துடன் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் வெள்ளநீர் புகுந்து பயிர்கள் அழுகிய நிலையில் உள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் பரவலாக பெய்து வரும் நிலையில் கனமழையின் காரணமாக பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. இது குறித்து ஆய்வு செய்து தற்போது பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவும், பயிர் சேத விவரங்களை அறியவும், அமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்றினை தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி தலைமையில் அமைத்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்த குழுவில் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே ஆர் பெரியகருப்பன், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் , சுற்றுச்சூழல் காலநிலை மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவினர் உடனடியாக டெல்டா மாவட்டங்களுக்கு சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்த ஏதுவாக தமிழக முதல்வருக்கு அறிக்கை தர அறிவுறுத்தப்பட்டுள்ளது.