மோடி அரசை கண்டித்து நாளை முதல் தொடர் மறியல் போராட்டம் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு

 
mutharasan

மோடி அரசே வெளியேறு என வலியுறுத்தி நாளை முதல் தொடர் மறியல் போராட்டம் நடத்தப்படும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கடந்த 10 ஆண்டுகளாக ஒன்றிய ஆட்சிப் பொறுப்பில் உள்ள மோடி தலைமையிலான அரசு மக்கள் விரோத கொள்கைகளை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இதனால் பெரும் பகுதி மக்கள் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. திட்டக் குழு கலைப்பு, காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு நிலை ரத்து, ‘நீட்’ தேர்வு மூலம் மருத்துவக் கல்வி மறுப்பு, மாநிலங்களின் அதிகாரங்களை பறித்து மத்தியில் குவித்தல், ஒரே நாடு, ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம் என்ற பெயரில் கூட்டாட்சி கோட்பாடுகளை தகர்த்து வருகின்றது.
பெரும் பன்னாட்டு குழும நிறுவனங்களின் லாப வேட்டைக்கு பொதுத்துறை நிறுவனங்களையும், இயற்கை வளங்களையும் பலியிட்டு வருகிறது. கருத்து தெரிவிக்கும் உரிமைகளை மறுத்து, ஏதேச்சதிகார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

mutharasan


 

வரலாறு காணாத வேலையின்மை, கட்டறுந்து உயர்ந்து வரும் விலைவாசி, வேலை நீக்கம், விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை மறுப்பு, விவசாய நிலங்களை பறித்து குழும பண்ணைகள் அமைக்கும் முயற்சி என நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் குந்தகம் ஏற்படுத்தும் செயலில் மோடி ஒன்றிய அரசு ஈடுபட்டு வருகிறது. தமிழ்நாடு உட்பட எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர் மாளிகை வழியாக போட்டி அரசு நடத்தி வருவதை இனியும் அனுமதிக்க இயலாது என்ற மக்களின் உணர்வை வெளிப்படுத்தும் முறையில் “மோடி அரசே வெளியேறு” என்ற முழக்கத்தை முன்வைத்து நாளை 12.09.2023 முதல் தமிழ்நாடு முழுவதும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபடுகிறது.வரும் 12, 13, 14 தேதிகளில் தொடர்ந்து நூற்றுக்கணக்கான மையங்களில் நடைபெறும் மறியல் போராட்டத்தில் பல்லாயிரம் ஆண்களும், பெண்களும் பங்கேற்பார்கள். தலைநகர் சென்னையில் வட சென்னை, பீச் ரயில் நிலையம் அருகில் உள்ள தபால் நிலையம் முன்பு நடைபெறும் மறியல் போராட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.


திருப்பூர் மாவட்டம், தாராபுரம் எல்ஐசி அலுவலகம் முன்பு நடைபெறும் மறியல் போராட்டத்தில் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் எம்.பி. கலந்து கொள்கிறார். திருப்பூர் மாநகரம், காட்டன் மார்க்கெட் அருகில் தபால் நிலையம் முன்பு நடைபெறும் மறியலில் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ரவி கலந்து கொள்கிறார். திருவாரூர் தபால் நிலையம் முன்பு நடைபெறும் மறியல் போராட்டத்திற்கு கோ.பழனிசாமி முன்னாள் எம்.எல்.ஏ. தலைமை ஏற்கிறார். கோட்டூர் தபால் நிலையம் முன்பு நடைபெறும் மறியல் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து எம்.எல்.ஏ. கலந்து கொள்கிறார். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் நடைபெறும் மறியல் போராட்டத்தில் தளி சட்டமன்ற உறுப்பினர் டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. பங்கேற்கின்றார். நாகப்பட்டினம் தபால் நிலையம் முன்பு நடைபெறும் மறியல் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ் எம்.பி., கோயமுத்தூர் மாநகரில் மத்திய தந்தி அலுவலகம் முன்பு நடைபெறும் மறியலில் மாநிலப் பொருளாளர் எம்.ஆறுமுகம் முன்னாள் எம்.எல்.ஏ.வும் பங்கேற்கின்றார். மாநில உரிமைகள், மக்கள் நலக் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் தொடர் மறியல் போராட்டத்தை  தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், மாணவர், இளைஞர்கள், பெண்கள், ஜனநாயக சக்திகள் அனைவரும் ஆதரித்து பங்கேற்குமாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு கேட்டுக் கொள்கிறது.  இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.