பாலியல் புகார்கள் தெரிவிக்க பள்ளிகளில் புகார் பெட்டி... கல்வி அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு!

 
students

பள்ளிகளில் மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க புகார் பெட்டி வைப்பதை உறுதிசெய்ய வேண்டுமென கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்களே பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. அண்மையில் சென்னை எஸ்.பி.பி பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிக்கினார். ராஜகோபாலன் போல பல ஆசிரியர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த நீதிமன்றம் பள்ளி மாணவ மாணவிகள் பாலியல் தொடர்பான புகார்களை தெரிவிக்க புகார் பெட்டி வைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. அதற்கான நடவடிக்கை எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் கல்வித்துறை ஏற்கனவே உத்தரவு பிறப்பித்தது.

students

இந்த நிலையில் தற்போது பள்ளிகளில் புகார் பெட்டிகள் வைப்பதை உறுதி செய்ய வேண்டும் என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககத்தின் இயக்குனர் கருப்பசாமி அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், மாணவ மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க பள்ளிகளில் புகார் பெட்டிகள் இருப்பதையும் அறிவிப்பு பலகையில் அனைத்து பெண் போலீஸ் நிலையத்தில் தொலைபேசி எண்கள் இடம் பெற்றிருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். மாதத்திற்கு ஒரு முறையாவது மெட்ரிகுலேஷன், மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகளை மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும். பாலியல் புகார் அளிக்க வரும் மாணவ-மாணவிகளுக்கு நம்பிக்கை கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.