முதல்வர் ஸ்டாலின் அறிவிப்புக்கு டிடிவி தினகரன் கண்டனம்!!
சிறையில் வாடும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கல் இனி விடுதலையாகவே முடியாதவாறு புதிய அரசாணை பிறப்பித்து இருக்கும் தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
20 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொடுஞ்சிறைவாசம் அனுபவித்து வரும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய முடியாது எனக்கூறி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சிறைப்படுத்தப்பட்டிருப்பவர்கள் இஸ்லாமிய மார்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதனாலேயே அவர்களுக்கான ஜனநாயக உரிமையான விடுதலையை மறுத்து வரும் திமுகவின் மதவாதப்போக்கு வன்மையானக் கண்டனத்திற்குரியது என்று பல்வேறு அரசியல் கட்சியினரும் கூறி வருகிறார்கள்.
இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், "பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும், 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இனி விடுதலையாகவே முடியாதவாறு புதிய அரசாணை பிறப்பித்து இருக்கும் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். 'தமிழக அரசுக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும்' என்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பேசிய திரு. ஸ்டாலின், ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகியும் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
nullபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும், 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இனி விடுதலையாகவே முடியாதவாறு புதிய அரசாணை பிறப்பித்து இருக்கும் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். (1/4)
— TTV Dhinakaran (@TTVDhinakaran) November 24, 2021
இப்போது 'குதிரை கீழே தள்ளி, குழியும் பறித்த கதையாக' அவர்கள் இனிமேல் விடுதலையாக முடியாத அளவிற்கு புதிய அரசாணையைப் பிறப்பித்திருக்கிறார். இதேபோல தாங்கள் தான் சிறுபான்மையினரின் காவலன் என்று கூறி, அந்த மக்களை தொடர்ந்து ஏமாற்றி வரும் தி.மு.க, 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்களின் விடுதலையையும் இந்த அரசாணையின் மூலம் கேள்விக்குறியாக்கி இருக்கிறது. இது குறித்து முதலமைச்சர் உரிய விளக்கம் அளிப்பாரா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.