நாளைமுதல் ஹெல்மெட் அணியாவிட்டால் வாகனம் பறிமுதல் - அதிரடி உத்தரவு!!
வரும் 13ம் தேதி முதல், ஹெல்மெட் அணியாதவர்களின் டூவீலரை பறிமுதல் செய்ய போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் நாளை முதல் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் மீறினால் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "தமிழகத்தில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் மட்டுமின்றி பின்னால் அமர்ந்து செல்பவர்களும் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக மக்களிடத்தில் போதிய விழிப்புணர்வை காவல்துறை ஏற்படுத்தியுள்ளது . இருப்பினும் இதை பின்பற்றாமல் அலட்சியமாக இருப்பதால் சாலை விபத்துகளில் பலர் உயிரிழந்து வருகின்றனர். இது போன்ற சம்பவங்களை தடுக்க ஈரோடு மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாதவர்களிடம் உடனடி அபராதம் விதிக்கப்பட்டு அங்கேயே வசூலிக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும் மாவட்டத்தில் 80 சதவீதத்திற்கு மேல் உள்ள இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் அலட்சியமாக உள்ளனர். ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை நாளை முதல் அனைத்து இருசக்கர வாகன ஓட்டிகளும் பாதுகாப்பாக ஹெல்மெட் அணியவேண்டும். நாளை முதல் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டுபவர்களிடம் அபராதம் வசூலிப்பதுடன் அவர்கள் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்" என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.