பிரதமரின் தமிழக வருகையை கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் - காங்கிரஸ் அறிவிப்பு

 
congress

பிரதமர் மோடி தமிழக வருகையை கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. 

பிரதமர் மோடி வரும் ஏப்ரல் 8ம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக தமிழகத்திற்கு  வருகை தருகிறார். சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த டெர்மினல் கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.  அதன் பிறகு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில்  சென்னை-கோவை இடையேயான வந்தே பாரத் விரைவு ரயில் சேவையும் பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார். இது இந்தியாவின் 11வது வந்தே பாரத் ரயில் சேவையாகும்.  தொடர்ந்து  விவேகானந்தர் இல்லத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு,  பல்லாவரத்தில் இருக்கக்கூடிய மைதானத்தில்,   ரூ.294 கோடி மதிப்பிலான 3 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி இடையில் 37 கிலோ மீட்டர் தூர அகல ரெயில் பாதை,  தாம்பரம் - செங்கோட்டை இடையே வாரம் 3 நாட்கள் இயக்கப்படும் விரைவு ரெயில் சேவை உள்ளிட்ட திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.   சென்னை பயணத்தை முடித்து கொண்டு  நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு வருகிற 9-ந் தேதி பிரதமர் மோடி செல்கிறார்.  

இந்நிலையில், தமிழகத்தில் பிரதமர் மோடி செல்லும் அனைத்து இடங்களிலும் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.  மேலும் ராகுல்காந்தியின் எம்.பி. பதவியை இழக்கச்செய்து, ஜனநாயகத்தை பிரதமர் மோடி சிதைத்து விட்டதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார். அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கான பிரதமர் மோடி நாளை சென்னை வரும் நிலையில் கறுப்பு கொடி காட்ட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.