காங்கிரஸ் கட்சியின் சார்பில் விருப்ப மனுப் படிவம் இன்று முதல் விநியோகம்!!

 
tn

காங்கிரஸ் கட்சியின் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட விரும்பும் கட்சி உறுப்பினர்கள்  விருப்ப மனுப் படிவத்தை இன்று முதல் பெற்றுக்கொள்ளலாம் என்று காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நடைபெறவுள்ள 2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 9 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், அத்துடன் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் 233 விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட விரும்பும் கட்சி உறுப்பினர்கள் Rs.500/- (ரூபாய் ஐநூறு மட்டும்) கட்டணமாக செலுத்தி விருப்ப மனுப் படிவத்தை இன்று (18.03.2024) திங்கட்கிழமை முதல் சென்னை, சத்தியமூர்த்தி பவனில் பெற்றுக் கொள்ளலாம்.

selvaperunthagai

பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுப் படிவங்களை 20.03.2024 புதன்கிழமை மதியம் 1 மணிக்குள் நாடாளுமன்ற பொதுத் தொகுதிகளுக்கு Rs. 30,000/- (ரூபாய் முப்பதாயிரம் மட்டும்), நாடாளுமன்ற தனித்தொகுதி மற்றும் மகளிருக்கு அனைத்துத் தொகுதிகளுக்கும் Rs. 15,000/- (ரூபாய் பதினைந்தாயிரம் மட்டும்), அதேபோல விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு Rs. 10,000/- (ரூபாய் பத்தாயிரம் மட்டும்) மகளிருக்கு Rs. 5,000/- (ரூபாய் ஐந்தாயிரம் மட்டும்) கட்சி நன்கொடையாக TAMILNADU CONGRESS COMMITTEE என்ற பெயரில் வங்கி வரைவோலையாக (Demand Draft Payable at Chennai) மட்டுமே செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

விருப்ப மனு அளிக்கும் அனைவரும் அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் முழுமையாக பூர்த்தி செய்தும், தனியாக இணைக்கப்பட வேண்டிய இதர விபரங்களை விருப்ப மனுவுடன் இணைத்தும் சென்னை, சத்தியமூர்த்தி பவனில் நேரில் வந்து சமர்ப்பிக்க வேண்டும்.


விருப்ப மனு அளிக்கும் அனைவரும் தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை (Voter ID Card), ஆதார் அட்டை (Aadhar Card) மற்றும் பான் கார்டு (Pan Card) நகலை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.