முதல்வருடன் ஆலோசனை - போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு மீண்டும் அழைப்பு
போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், செயலாளருடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான 15-வது ஊதிய உயர்வு, ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கான அகவிலைப்படி உயர்வு, காலிப் பணியிடங்களை நிரப்புதல், ஓய்வூதியப் பயன்களை உடனடியாக வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை தொழிற்சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்க முடிவு செய்துள்ளன.
இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் போக்குவரத்துத்துறை செயலாளருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார். 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஜன.9ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ள நிலையில் ஆலோசனை நடைபெற்றது. இதன் காரணமாகபோக்குவரத்து தொழில்சங்கங்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார். முன்னதாக போக்குவரத்து ஊழியர்கள், வரும் 9ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்திருந்த நிலையில், போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு வர வேண்டும், வேலை நிறுத்தம் செய்வது பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும், ஊழியர்கள் பணி விடுப்பு, மாற்று விடுப்பு, ஈட்டிய விடுப்பு என அனைத்து விதமான விடுப்புகளையும் தவிர்த்து, பணிக்கு வந்து சீரான பேருந்து இயக்கம் அமைய உதவ வேண்டும், சேம மற்றும் தினக்கூலி பணியாளர்கள் கட்டாயமாக பணிபுரிய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.