திருச்சி அருகே சுற்றுலா வேன் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து - 20 பேர் காயம்

 
விபத்து

திருச்சி அருகே சுற்றுலா வேன் மீது, மினி கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். 

திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டி புதூரை சேர்ந்தவர்  மாரியப்பன். இவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 22 பேருடன் இன்று காலை சாமி கும்பிடுவதற்காக கரூர் மாவட்டம் தாந்தோன்றிமலைக்கு,  சுற்றுலா வேனில் சென்று கொண்டிருந்தார். திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அடுத்த முக்கொம்பு சுற்றுலாத்தலம் அருகே சென்றபோது, பின்னால் வந்த மினி கண்டெய்னர் லாரி, சுற்றுலா வாகனத்தை முந்திச் செல்ல முயன்றது.

விபத்து

அப்போது, கரூரில் இருந்து திருச்சி நோக்கி வந்த அரசுப்பேருந்து, மினி கண்டெய்னர் லாரி மீது மோதியது. இதில், கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி, சுற்றுலா வாகனத்தின் மீது மோதி 2 வாகனங்களும் சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் சுற்றுலா வேனில் வந்த நபர்கள் 21 பேர் காயமடைந்தனர்.

அவர்களை அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த ஜீயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விபத்து காரணமாக திருச்சி - கரூர் நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.