தமிழகத்தில் 3வது அலை தொடங்கி விட்டது - சுகாதாரத்துறை எச்சரிக்கை!!
தமிழகத்தில் 3-வது அலை தொடங்கி விட்டதால் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று பொது மக்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கிய நிலையில் நேற்று ஒரேநாளில் 1, 594 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27 லட்சத்து 51 ஆயிரத்து 128 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 790 ஆக உயர்ந்துள்ளது. இந்த சூழலில் தமிழகத்தில் இன்று முதல் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட 33.20 லட்சம் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. பள்ளிகளில் மட்டும் ஏறத்தாழ 26 லட்சம் மாணவர்கள் இருக்கும் நிலையில், 4 லட்சம் பொறியியல் மாணவர்கள் உள்ளனர். இதில் 46 சதவீத மாணவர்கள் முதல் தவணை தடுப்பூசியும், 12 சதவீத மாணவர்கள் 2-வது தவணை தடுப்பூசியும் மட்டுமே செலுத்தி உள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "ஒமிக்ரான் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3 முதல் 4 நாட்களிலேயே நெகட்டிவ் என வந்துவிடுகிறது. தமிழகத்தில் டெல்டா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் இணைந்து 3வது அலையாக பரவுகிறது. ஜனவரி 10ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகள் தொடங்கப்படும். வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கு தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள். சென்னையில் உள்ள சில கல்லூரி விடுதிகளில் தனிமைப்படுத்தும் மையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டபின் தொற்று இல்லாதவர்கள் மற்றும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதிக்கலாம் என்று அனைத்து மாவட்ட மற்றும் மாநகராட்சிக்கு அறிவுறுத்தியுள்ளது" என்றார்.