சேலம் பெரியார் பல்கலை.யில் பட்டியலின மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.2.66 கோடியில் ஊழல்
சேலம் பெரியார் பல்கலைக்கழக எஸ்சி/எஸ்டி பட்டியலின மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட 2.66 கோடி நிதியில் ஊழல் நடந்திருப்பதாக பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக பட்டியலின மாணவர்கள் சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மோசடி மற்றும் முறைகேடு வழக்கில் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் சேலம் மாநகர போலீஸாரால் கைது செய்யப்பட்டு, மோசடி, கூட்டு சதி, கொலை மிரட்டல், எஸ்சி எஸ்டி வன்கொடுமை சட்டப்பிரிவு ஆகிய 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த நிலையில், நிபந்தனை ஜாமினில் தனியார் மருத்துவமனையில் ஆஞ்சியோகிராம் அறுவை சிகிச்சை செய்து கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் மற்றும் கணினி அறிவியல் துறை துணை பேராசிரியர் சதீஷ் ஆகியோர் தொடர்ந்து தலைமுறைவாக உள்ளனர். காவல்துறையினர் துணை வேந்தர் மற்றும் பதிவாளர் வீடுகளில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து தொடர் மோசடி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த நிலையில் எஸ்சி எஸ்டி பட்டியல் இன மாணவர்களுக்கு தீனதயால் உபாத்தியாயத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட 2.66 கோடி நிதியில் ஊழல் நடந்திருப்பதாக புதிதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெரியார் பல்கலைக்கழக கழகத்தில் பயிலும் எஸ்சி/எஸ்டி பட்டியலின மாணவர்கள் சிலர் சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளனர். பட்டியலின மாணவர்களுக்கு அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட நிதியை தங்களுக்கு வழங்காமல் முறைகேடு செய்ததாக மனுவில் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை முடிந்து வருகிற இரண்டாம் தேதி பெரியார் பல்கலைக்கழக கல்லூரி திறக்கப்பட உள்ளது. பெரியார் பல்கலைக்கழகத்தில் துறை சார்ந்த மாணவர்கள் , ஆய்வு மாணவர்கள் என 3000 மாணவர்கள் பயின்று வருகின்றனர். பேராசிரியர்கள் துணை பேராசிரியர்கள் என 600 பேர் பணியாற்றி வருகின்றனர். துணைவேந்தர் நிபந்தனை ஜாமினில் சிகிச்சை பெற்று வருகிறார், பதிவாளர் தலைமறைவாகி உள்ளார். இதனால் நிர்வாகம் முழுவதுமாக முடங்கியுள்ளது. மேலும் மாணவர்களின் கல்வியும் கேள்விக்குறியாக உள்ளது.