பேரவைக்குள் குட்கா விவகாரம்- ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு
கடந்த அதிமுக ஆட்சியில் சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் தொடர்பான உரிமை மீறல் நோட்டீசுக்கு விளக்கமளிக்கும்படி, தற்போதைய முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2017ம் அதிமுக ஆட்சியில் சட்டமன்றத்துக்குள் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பரவலாக கிடைப்பதாக கூறி குட்கா கொண்டு சென்றதாக, அப்போதைய எதிர்க்கட்சி தலைவரும், தற்போதைய முதல்வருமான ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீசை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து முந்தைய ஆட்சியில் தாக்கல் மேல் முறையீட்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகளின் விசாரணை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் குமரப்பன் அமர்வு முன்பு நடைபெற்றது. ஆட்சி மாறிவிட்டதால் உரிமை மீறல் நோட்டீஸ் காலவதியாகிவிட்டது என்று அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் வாதிட்டார். அரசியலமைப்பு சட்டப்படி, பதவிக்காலம் முடிந்ததும், சட்டமன்றம் கலைந்து விடுகிறது என்று திமுக மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிந்து விட்டால் உரிமை மீறல் பிரச்சனை காலாவதியாகி விட்டதாக திமுக எம்எல்ஏக்கள் தரத்தில் முன்வைக்கப்பட்ட வாதத்தை ஏற்க முடியாது என்று கூறி, உரிமை மீறல் நோட்டீசை ரத்து செய்து கடந்த 2021 பிப்ரவரி மாதம் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், உரிமை மீறல் நோட்டீசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் உரிமை குழுவிடம் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும், உரிமைக்குழு சட்டமன்ற விதிகளை பின்பற்றி, விசாரணை நடத்தி இறுதி முடிவு எடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


