‘பெரியார் குறித்து பேசிய சீமான் மீது வழக்குப்பதிவு செய்யுங்கள்’ - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சீமான் மீது வழக்கு பதிவு செய்ய மணப்பாறை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

காம இச்சையை தீர்க்க தாய், தங்கை, அக்கா என யாருடனும் உடலுறவு கொள்ளலாம் என பெரியார் பேசியதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த ஜனவரி மாதம் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மணப்பாறையைச் சேர்ந்த அரசு வழக்கறிஞர் முரளிகிருஷ்ணன் என்பவர் தனிப்பட்ட வகையில் பெரியார் குறித்து சர்சைக்குறிய வகையில் பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று மணப்பாறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் மனு ரசீது மட்டும் கொடுத்து விட்டு வழக்கு பதிவு செய்யாமல் புகாரை முடித்து வைத்து விடுவதாக கூறி உள்ளனர். ஆதாரங்கள் கொடுக்கப்பட்டும் வழக்கு பதிவு செய்யாமல் இருந்ததால் வழக்கறிஞர் முரளிகிருஷ்ணன் இதுதொடர்பாக மணப்பாறை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் சீமான் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி அசோக்குமார் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.


