திரைப்படம் வெளியான 3 நாட்களில் விமர்சனம் செய்ய தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

 
Highcourt Highcourt

திரைப்படங்கள் வெளியான மூன்று நாட்களுக்கு விமர்சனங்களை சமூக வலைதளங்களில் வெளியிட தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கங்குவா படத்தின் புதிய போஸ்டர் வைரல்

நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான கங்குவா படம் குறித்து சமூக ஊடகங்களில் எதிர்மறை விமர்சனங்கள் வெளியாகின.  இந்த பின்னணியில், படங்கள் வெளியான மூன்று நாட்களுக்கு விமர்சனங்களை வெளியிட தடை விதிக்கக் கோரி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதிதாக வெளியாகும் திரைப்படங்கள் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்களை வெளியிடுவது தொடர்பாக விதிமுறைகளை வகுக்க மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகும் போது, அவை குறித்து எதிர்மறை விமர்சனங்கள் வெளியிடப்படுவதால் படங்கள் தோல்வி அடைவதால், திரைத்துறையில் அசாதாரண சூழல் நிலவுவதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி சவுந்தர் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் புதிதாக வெளியாகும் திரைப்படங்கள் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வெளியாவதால், படத்தை பார்க்க விரும்பும் மக்களின் மனநிலை மாறுவதாகவும், படத்தில் நடித்த நடிகர், இயக்குனர் குறித்து அவதூறு பரப்பப்படுவதாக தெரிவித்தார். அவதூறு பரப்புவது குறித்து காவல் துறையிடம் புகார் அளிக்கலாம் என தெரிவித்த நீதிபதி, விமர்சனம் கருத்து சுதந்திரம் என்பதால், பொத்தாம் பொதுவாக உத்தரவு பிறப்பிக்க முடியாது எனவும், சில படங்கள் நல்ல விமர்சனங்களை பெறுவதாகவும் தெரிவித்தார். மேலும், திரைப்படங்கள் வெளியான மூன்று நாட்களுக்கு விமர்சனங்கள் வெளியிட தடை விதிக்க மறுத்த நீதிபதி, வழக்கு தொடர்பாக நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, மத்திய - மாநில அரசுகள் மற்றும் யூ- டியூப் நிறுவனத்துக்கு  உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.