கோவையில் வெளுத்து வாங்கிய மழை... வழக்கத்தை விட 90% கூடுதலாக பதிவு!
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை அக்டோபர் மாதமே தொடங்கிவிட்டது. அப்போது முதலே கோவை உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் மழை கொட்டித்தீர்த்தது. அதேபோல நவம்பர் மாதம் அடுத்தடுத்து உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, காரைக்கால் என பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கோவையில் தொடர் மழை காரணமாக நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. கோவை மக்களின் முக்கிய நீராதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. இன்னும் சில நாட்களுக்கு அங்கு மழைப்பொழிவு நீடிக்கும் எனவும் சொல்லப்பட்டுள்ளது. மழைப்பொழிவு குறித்து தமிழ்நாடு வேளாண்மை கால நிலை ஆராய்ச்சி மையத்தின் தலைவர் ராமநாதன் கூறுகையில், "கோவை மாவட்டத்தில் கடந்த 30 ஆண்டுகளை ஒப்பிடும் போது இந்த ஆண்டு தான் அதிகளவில் வடகிழக்கு பருவ மழை பெய்துள்ளது.
கடந்த 30 ஆண்டுகளில் அக்டோபர் மாத சராசரி மழை அளவு 189.9 மி.மீ., இந்த ஆண்டு அக்டோபர் மாதம் பெய்த மழையின் அளவு 190.6 மி.மீ. இதே போல கடந்த 30 ஆண்டுகளில் நவம்பர் மாதம் பெய்த மழையின் சராசரி அளவு 143.9 மி.மீ. ஆனால் இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் 271.9 மி.மீ. அளவு மழை பெய்துள்ளது. இது சராசரி அளவை காட்டிலும் 90 சதவீதம் அதிகம். கோவை மாவட்டம் வட கிழக்கு பருவ மழை காலங்களான அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெறும் சராசரி மழை அளவு 363.4 மி.மீ. ஆனால் கடந்த அக்டோபர், நவம்பர் ஆகிய 2 மாதங்களில் பெய்த மழை அளவு 462.5 மி.மீ.” என்றார்