தனக்கு ஆளுநர் பதவி வழங்கப்பட்டிருப்பது தமிழகத்திற்கே பெருமை - சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி

 
CP Radhakrishnan

மீண்டும் ஒரு ஆளுநர் பதவியை தமிழகத்தை சேர்ந்த தனக்கு அளிக்கப்பட்டிருப்பது தமிழகத்திற்கே பெருமை என ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று காலை மகாராஷ்டிரா உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து உத்தரவிட்டார். ஜார்கண்ட் மாநில ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல், மணிப்பூர் ஆளுநராக இருந்த இல.கணேசன் நாகலாந்து ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், திருப்பூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த  சி.பி.ராதாகிருஷ்ணன்  கூறியதாவது:- மீண்டும் ஒரு ஆளுநர் பதவியை ஜனாதிபதி அவர்களும், பாரத பிரதமர் மோடி அவர்களும் அளித்திருப்பது, அவர்கள் தமிழ் இனத்தின் மீது, தமிழ் கலாச்சாரத்தின் மீது, தமிழ் பண்பாட்டின் மீது, தமிழ் மொழியின் மீது மற்றும் தமிழர்களின் மீது மகத்தான அன்பு, பாசம், மரியாதை இருப்பதை காட்டுகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் கவர்னர் பதவியில் இருப்பது புதிய வரலாறு படைக்கப்பட்டிருக்கிறது. எனக்கு அளிக்கப்பட்டிருக்க இந்த பதவியின் மூலமாக அதிலும் குறிப்பாக ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு தரப்பட்டிருப்பது அங்கு வாழும் பழங்குடியின மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், சமுதாயத்திலே அடித்தட்டில் உள்ள மக்கள் வாழும் பகுதியில் எனக்கு பணியாற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது. 

இந்த வாய்ப்பை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த திறம்பட பயன்படுத்துவேன். அடித்தட்டு மக்களின் வாழ்க்கை மேம்பட பணியாற்றுவேன். இது எனக்கு கிடைச்ச பெருமையாக நினைக்கவில்லை ஒட்டுமொத்த தமிழகத்திற்கு கிடைத்த பெருமையாக நினைக்கிறேன். எனக்கு இந்த வாய்ப்பை அளித்த ஜனாதிபதிக்கும், பிரதமர் மோடிக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு கூறினார்.