"இல்லம் தேடி கல்வி" ஆர்எஸ்எஸ் கொள்கையா?... விளக்கிய முதல்வர் ஸ்டாலின் - பாராட்டிய சிபிஐ!
கொரோனா பரவல் காரணமாக கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. மாணவர்களின் கல்வித்திறன் பெரும் பாதிப்புக்குள்ளானது. நிறைய மாணவர்கள் தாங்கள் என்ன படித்தார்கள் என்பதையே மறந்துவிட்டார்கள். இவர்களின் கற்றல் குறைபாட்டை போக்கும் வகையில் பள்ளிக்கல்வித் துறை சார்பில், மாணவர்களின் இல்லங்களுக்கே சென்று கல்வி கற்பிக்கும் இல்லம் தேடி கல்வி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் இதற்குக் கடும் விமர்சனம் எழுந்தது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் திட்டத்தை திமுக அரசு செய்வதாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டார்.
அதேபோல புதிய கல்விக்கொள்கையும் இதே பாணியைத் தான் வலியுறுத்துகிறது. அதை எதிர்க்கும் திமுக அரசு அதே பாணியைக் கையிலெடுப்பது ஆபத்தில் முடியும் என எச்சரித்திருந்தார். பெரும் விமர்சனம் ஏற்பட்டதால், முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். மத்திய அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த போவதில்லை என்பதை தெளிவுபடுத்திய அவர், மாநில அளவிலான கல்விக்கொள்கையினை வகுத்திட கல்வியாளர் அடங்கிய குழு ஒன்று விரைவில் அமைக்கப்படும் என்றும் கூறினார்.
இல்லம் செல்லும் தன்னார்வாளர்கள் கல்வித் தகுதி, இருப்பிடம், முன்னனுபவம் போன்ற பல்வேறு அளவீடுகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மூலம் நேரடியாகத் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் கூறியிருக்கிறார். இதனை பாராட்டி சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "இல்லம் தேடி கல்வி திட்டத்தை விளக்கி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை மதிப்புமிக்கதாகும். இந்த திட்டத்தில் சங்பரிவார் கும்பல் ஊடுருவி பிஞ்சு மனங்களில் மதவெறி நஞ்சை விதைக்கும் விபரீதம் ஏற்படக் கூடும் என்பதை கருத்தில் கொள்ளுமாறு சிபிஐ வேண்டுகோள் விடுத்திருந்தது.
இதை கருத்தில்கொண்டு அரசின் வழிகாட்டுதல்களை முறையாக கடைப்பிடிப்பவர்கள் மட்டுமே தன்னார்வலர்களாக தொடர அனுமதிக்கப்படுவர் என தெளிவுபடுத்தி இருக்கிறார்.மத்திய அரசு அறிமுகப்படுத்திஉள்ள புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த போவதில்லை என மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். மாற்றுக் கருத்துகளை உள்வாங்கி, அதில் சொல்லப்பட்டுள்ள விவரங்கள் குறித்து விழிப்புடன் இருப்பதாக விளக்கம் தரும் பொறுப்புணர்வு மெச்சத்தக்கதாகும். உன்னத நோக்கங்களுக்கு ஏற்ப ‘இல்லம் தேடி கல்வி’ திட்டம் செயல்படுத்தப்படுமானால், அத்திட்டம் வெற்றி பெற சிபிஐ முழு ஒத்துழைப்பை வழங்கும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.