"ஆளுநர் பதவி தேவையில்லை" சிபிஐ (எம்) தேர்தல் அறிக்கை வெளியீடு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் மக்களவைத் தேர்தல் அறிக்கையை கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் இன்று (06.04.2024) சென்னையில் வெளியிட்டார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஐ. ஆறுமுக நயினார், பா. ஜான்சிராணி, வெ. ராஜசேகரன், இ. முத்துக்குமார், தென்சென்னை மாவட்ட செயலாளர் ஆர். வேல்முருகன், மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜி. செல்வா, காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் சி. சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கீழ்க்கண்ட முக்கியமான கோரிக்கைகள் நிறைவேற நாடாளுமன்றத்தில் வலுவாகக் குரலெழுப்புவோம்.

அரசமைப்பு சட்டம்
ஜனநாயகம், கருத்துரிமை, மதச் சார்பின்மை, கூட்டாட்சி, பாலின
சமத்துவம், பகுத்தறிவு சார்ந்த அறிவியல் அணுகுமுறை உள்ளிட்ட
மாண்புகளை மீட்டெடுக்கவும், இந்தியக் குடியரசின் பன்மைத்துவத்தைப் பாதுகாக்கவும் வலியுறுத்தப்படும்.
மத்திய புலனாய்வு துறை, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி உள்ளிட்ட அரசமைப்பு சட்டப்படி
நிறுவப்பட்ட அமைப்புகளின் சுயேச்சை தன்மையை மீட்டெடுப்போம்.
பீமா கோரோகான் வழக்கு உட்பட ஊபா பிரிவுகளின் கீழ் தொடரப்பட்டுள்ள
பொய் வழக்குகளை திரும்பபெற வலியுறுத்தப்படும்.
ஊபா, ஆப்ஸ்பா, பொதுப் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட கொடுங்கோன்மைச்
சட்டங்களையும், குற்றவியல் நடைமுறை சட்டத்தையும் திரும்ப பெற
பாடுபடுவோம்.
காசி, மதுரா உள்ளிட்ட சிறுபான்மை மத வழிபாட்டுத் தலங்களை
பாதுகாக்கும் வகையில் மத வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991ஐ
வலுப்படுத்தச் செய்வோம்.
காஷ்மீரில் அடக்குமுறைகளை கைவிட்டு அனைத்து அரசியல்
உரிமைகளையும் வழங்கிடச் செய்வது. காஷ்மீர் மாநிலத்தை மீண்டும்
ஒருங்கிணைத்து உடனடியாக தேர்தல் நடத்த வலியுறுத்துவோம்.
இந்திய தண்டணைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், சான்றுகள்
சட்டம் ஆகியவற்றுக்கு பதிலாக இயற்றப்பட்டுள்ள மூன்று புதிய
சட்டங்களை திரும்ப பெற வற்புறுத்துவோம்.
சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடை சட்டத்தைத் திரும்பப் பெறச் செய்வது,
தகவல் பெறும் உரிமை சட்டம், இடித்துரைப்பாளர் பாதுகாப்புச் சட்டம்,
லோக்பால் சட்டம் ஆகியவற்றில் கொண்டு வரப்பட்ட திருத்தங்களை
திரும்ப பெற வலியுறுத்துவோம்.
மாநில உரிமை

மாநில சுயாட்சியை மையப்படுத்தி, அதிகாரப் பகிர்வை அர்த்தமுள்ளதாக்க
ஒன்றிய மாநில உறவுகள் சீரமைப்பு, மாநிலங்களுக்கு அதிக அதிகாரம்
மற்றும் நிதி ஆதாரம்; கலைக்கப்பட்ட திட்டக்குழு, முடக்கப்பட்ட
மாநிலங்களிடை மன்றம், தேசிய வளர்ச்சி கவுன்சில் ஆகிய அமைப்புகளை
மீண்டும் உருவாக்கவும், கடந்த 10 ஆண்டுகளில் மாநில உரிமைகளை
பறிக்கும் விதத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மாற்றி அமைக்க
வலியுறுத்துவோம்.
ஆளுநர் பதவி தேவையில்லை என்பதே மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைபாடு;
எனினும் தற்போது மாநில அரசின் ஆலோசனை பெற்று ஆளுநரை
நியமித்தல், மாநில பல்கலைக் கழகங்களுக்கு வேந்தராக ஆளுநருக்கு
பதில் முதலமைச்சரை நியமனம் செய்ய வற்புறுத்துதல், தமிழகத்திற்கு வர
வேண்டிய உரிய நிதிகளை கிடைக்க பாடுபடுவோம்.
வேலைவாய்ப்பு
வேலை செய்யும் உரிமையை அடிப்படை உரிமையாக்குதல்; வேலை
கிடைக்கும் வரை வேலையில்லா கால நிவாரணத் தொகை வழங்குதல்,
ஒன்றிய, மாநில அரசுகளின் அனைத்துத்துறை அலுவலகங்களிலும் உள்ள
காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்ய வற்புறுத்துவோம்
கிராமப்புற உழைப்பாளி மக்களின் நலனைப் பாதுகாத்தல், ஊரக வேலை
உறுதி சட்டத்தை விரிவுபடுத்தி 200 நாட்கள் வேலையளிப்பது,
தினக்கூலியாக ரூ. 600/. ஆக வழங்கிடுதல், உரிய நிதி ஒதுக்கீட்டுடன்,
உறுதியாக அமல்படுத்துதல், நகர்ப்புற வேலை உறுதி சட்டத்தை கொண்டு
வருவதற்கு வலியுறுத்துவோம்,
அரசாணை 152, 115, 131 ரத்து செய்தல், உற்பத்தி மற்றும்
சேவைத்துறைகளில் ஒப்பந்தமுறை ஒழிக்கப்பட்டு ஒப்பந்த
தொழிலாளர்களை நிரந்தரப்படுத்தல், அங்கன்வாடி, மதிய உணவு, மருத்துவ
சேவை உள்ளிட்ட திட்டங்களில் பணிபுரியும் திட்ட ஊழியர்களை
நிரந்தரப்படுத்துதல் மற்றும் சமூக பாதுகாப்புடன் கூடிய வேலையை
அடிப்படை உரிமையாக்கி சட்டமாக்குவதோடு, மக்கள் தொகை
எண்ணிக்கைக்கேற்ப புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கிட
வற்புறுத்துவோம்.
வரி விதிப்பு / பகிர்வு

கார்ப்பரேட்டுகள், பில்லியன் கோடீஸ்வரர்கள் மீது கூடுதல் வரி விதிப்பு
(நேர்முக வரி அதிகரிப்பு) என்கிற முறையில் மாற்றம்; செல்வ வரியை
மீண்டும் கொண்டு வர வலியுறுத்துவோம்,
செஸ் உட்பட அனைத்து வரிகளிலும் மாநிலங்களுக்கு உரிய நிதிப்பகிர்வு
அளிக்க வலியுறுத்துவோம்.
கல்வி
கல்வியை மாநில பட்டியலுக்குக் கொண்டு வருதல், கல்விக்கு உள்நாட்டு
மொத்த உற்பத்தியில் 6 சதவிகித ஒதுக்கீடு; தேசிய கல்விக் கொள்கை
2020ஐ திரும்பப் பெறுதல், மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இட
ஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்துதல், அனைத்துத் தரப்பினரும்
அணுகும் விதத்திலும் சுதந்திர சிந்தனைகளை பாதுகாக்கும் விதத்திலும்
மாற்றி அமைத்தல், கல்வி, ஆரோக்கியம், குடியிருப்பு போன்ற அடிப்படை
வசதிகள் அனைவருக்கும் கிடைக்க குரலெழுப்புவோம்.
நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விதிவிலக்கு பெற தமிழ்நாடு அரசு
வகை செய்துள்ள சட்டத்திற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் பெறவும், க்யூட்
தேர்வை ரத்து செய்யவும் வலுவாக குரலெழுப்புவோம்.
மதரீதியில், வகுப்புவாதத்தைப் புகுத்தும் வகையில் திணிக்கப்பட்ட
அனைத்து கருத்துக்களையும், பாடங்களையும் நீக்கவும் - NCERT மூலம்
நீக்கப்பட்ட வரலாறு மற்றும் டார்வின் கோட்பாடுகள் உள்ளிட்டவற்றை
சேர்க்கவும் - NCERR, SCERT கவுன்சில் உறுப்பினர்களை மறுநிர்ணயம்
செய்யவும், ஏற்கனவே செய்யப்பட்ட வரலாற்றை திருத்தும் முயற்சிகளை
ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம்.
ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதிக்கும் புதிதாக ஒரு மத்திய கல்வி
நிறுவனத்தைத் துவங்க குரலெழுப்புவோம்.
விவசாயம்
வேளாண் தொழிலையும், விவசாயிகளையும் பாதிக்கும் ஒன்றிய அரசின்
வேளாண் திருத்தச் சட்டத்தை முற்றாக திரும்ப பெறச் செய்ய
வலியுறுத்துவோம்.
அனைத்து விவசாயக் கடன்களையும் ரத்து செய்வது, வேளாண் துறைக்குக்
கூடுதல் அரசு முதலீடு, உற்பத்தி பொருட்களுக்கு நியாய விலை, அரசு
கொள்முதல், விவசாய கடன் எளிதில் கிடைத்தல், எம்.எஸ்.சுவாமிநாதன்
கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தல், நாடு முழுவதும் உள்ள
விவசாயிகள் முழுப்பயன்பெறும் வகையில் பயிர்காப்பீடு திட்டம், வேளாண்
துறை உள்கட்டமைப்பு, வேளாண் சார்ந்த முதலீடுகள் மற்றும் புதிய
திட்டங்கள் உள்ளிட்டவற்றுக்கான கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய
போராடுவோம்.
விவசாய தொழிலாளிகளுக்கு தனித்துறை உருவாக்கம் மற்றும் சமூகப்
பாதுகாப்பை உறுதி செய்ய ஒருங்கிணைந்த மத்திய சட்டத்தை கொண்டு
வர குரலெழுப்புவோம்.
நாடு முழுவதும் ஏற்பட்டு வரும் பருவநிலை மாற்றங்களை கணக்கில்
கொண்டு நீர் ஆதாரங்களை பெருக்குவதற்கும், நீர்பாசன கட்டமைப்புகளை
பலப்படுத்துவதற்கும் முன்னுரிமை வழங்க வலியுறுத்துவோம்.
நிலங்களை வரைமுறையற்று கையகப்படுத்தும் கொடுமைக்கும்,
குடியிருப்புகளை விட்டு மக்களை வெளியேற்றும் அவல நிலைக்கும்
முற்றுப்புள்ளி வைத்து, விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள்
உள்ளிட்ட மக்கள் திரளைப் பாதுகாக்கும் விதத்தில் நிலம் குறித்த
கொள்கையும், சுற்றுச்சூழல் கொள்கையும் உருவாக்க வற்புறுத்துவோம்.
நிலச்சீர்திருத்தத்தை அமல்படுத்தி நிலமற்ற கிராமப்புற வேளாண்
குடும்பங்களுக்கு நில விநியோகம் செய்ய குரலெழுப்புவோம்.
தனியார்மயத்தை கைவிடுதல் - பொதுத்துறையை பாதுகாப்பு
கல்வி, சுகாதாரம், மருத்துவம், போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படைத்
துறைகளை தனியார்மயமாக்குவதை கைவிட வற்புறுத்துவோம்.
காப்பீடு, வங்கி, இரயில்வே, ஆற்றல் துறை உள்ளிட்ட பொதுத்துறை
நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை கைவிட வலியுறுத்துவோம்.
மின்சார திருத்தச் சட்டத்தையும், உதய் மின் திட்டத்தையும் திரும்ப பெற
வலுவாக குரலெழுப்புவோம்.
தொழிலாளர் நலன் / தொழில் பாதுகாப்பு

தொழிலாளர்களை கடுமையாக பாதிக்கும் ஒன்றிய அரசின் நான்கு சட்டத்
தொகுப்புகளை உடனடியாக திரும்ப பெற்று தொழிலாளர்களுக்கு சாதகமாக
மாற்றுவோம். தொழிலாளர் நல சட்டங்களை பலப்படுத்த போராடுவோம்.
சிறு-குறு நடுத்தர தொழில்கள் நலிவடையச் செய்யும் கொள்கையினை
கைவிடுவது, இத்தொழில்களை பாதுகாத்திட சிறப்பு திட்டங்களை
வலுப்படுத்துதல், பன்னாட்டு நிறுவனங்கள் இந்நாட்டு சட்டங்களுக்கு
உட்பட்டு செயல்படுவதை உறுதி செய்தல், சிறு வணிகத்தை அழிக்கும்
பெருந்தொழில் ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்வது
வலியுறுத்தப்படும்.
அரிசி உள்ளிட்டு அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கும், உயிர் காக்கும்
மருந்துகளுக்கும், ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு
ஒன்றிய பாஜக அரசு விதித்துள்ள அநியாய ஜி.எஸ்.டி. வரி உயர்வை
திரும்ப பெற வலியுறுத்துவோம்.
ஒன்றிய பாஜக அரசின் நாசகர பொருளாதாரக் கொள்கையினால்
ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை
எடுக்க வலியுறுத்துவோம்.
விலைவாசி உயர்வுக்கேற்ப அனைத்து பிரிவு தொழிலாளர்களுக்கும்
குறைந்தபட்சம் ரூ.26,000/- மாத ஊதியம் நிர்ணயம் செய்தல், இ.பி.எப்.
ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூ. 9,000/- ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்க
பாடுபடுவோம்.
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் தொழிற்சங்க அங்கீகாரத்திற்கான
ரகசிய வாக்கெடுப்பு நடத்தி கூட்டு பேர உரிமையை நிலைநாட்டவும்,
குறைந்தபட்சம் 10 விழுக்காடு பெறும் சங்கங்களை அங்கீகரிக்கவும்
வலியுறுத்துவோம்.
பாரதீய நியாய சன்ஹிதா “பி.என்.எஸ்.” எனும் பெயரில் வாகன விபத்தால்
உயிரிழப்பு ஏற்பட்டால் 10 ஆண்டு சிறை, ரூ. 7 லட்சம் அபராதம்
விதிக்கப்படும் என்ற சட்டத்தைத் திரும்ப பெறவும், காலாவதியான சுங்கச்
சாவடிகளை மூடி, கட்டணங்களைக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்க
வற்புறுத்துவோம்.
அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க
ஒருங்கிணைந்த சமூக பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றுதல், பெண்
தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்குதல்,
பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு கமிட்டி அமைத்தல்
வலியுறுத்தப்படும்.
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தைக்
கொண்டு வர வலுவாக குரெலழுப்புவோம்.
ஐடி ஊழியர்களை தொழில் தகராறு சட்டத்தின் கீழ் கொண்டு வருவதும்,
அவர்களின் பணிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, சட்டவிரோத பணி நீக்கம்
மற்றும் ஆட்குறைப்பில் ஈடுபடும் நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்க
வற்புறுத்தப்படும்,
சிறு-குறு தொழில்களை பாதுகாப்பதற்கும், மின் கட்டணம் – சொத்துவரி
உயர்வுகளை மறு ஆய்வு செய்வதற்கும் வலியுறுத்தப்படும்.
சிறு-குறு தொழில் முனைவோர்களுக்கு வங்கிகள் மூலம் கடன் எளிதாக
கிடைக்கச் செய்ய வற்புறுத்துவோம்.
பணிபுரியும் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் கால
விடுமுறையை உரிமையாய் கொண்டுவர குரலெழுப்புவோம்.
தமிழக வளர்ச்சி / தமிழ் வளர்ச்சி
கிடப்பில் போடப்பட்ட சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவது,
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்தல், மதுரை விமான
நிலையத்தை பன்னாட்டு முனையமாக தரம் உயர்த்தல், உச்சநீதிமன்ற
கிளையைத் தமிழகத்தில் நிறுவுதல், வேலை வாய்ப்புகளை உருவாக்கக்
கூடிய புதிய தொழிற்சாலைகள் மற்றும் வேளாண்சார் தொழிற்சாலைகள்
அமைத்தல் வற்புறுத்தப்படும்.
விழுப்புரம்-தஞ்சாவூர் ரயில்பாதை இருவழிப்பாதையாக மாற்ற
வலியுறுத்துவோம். தமிழக வளர்ச்சிக்கான ரயில்வே திட்டங்களை கொண்டு
வருதல், மூத்த குடிமக்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதியினருக்கு ரயில்
பயணச் சலுகையை மீண்டும் நடைமுறைப்படுத்துதல் வலியுறுத்தப்படும்.
தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றுவதற்கு
குரலெழுப்புவோம்.
தமிழ் மொழியை ஆட்சி மொழியாக, அலுவல், வழக்காடு, பயிற்று
மொழியாக ஆக்குதல், தமிழ் வளர்ச்சிக்கு உரிய நிதியை ஒன்றிய
அரசிடமிருந்து பெறுதல், அகில இந்திய அனைத்து தேர்வாணைய போட்டித்
தேர்வுகளை தமிழில் எழுதும் ஏற்பாட்டை உறுதிப்படுத்துதல்
வற்புறுத்தப்படும்.
உயர்மட்ட ஊழல் தடுப்பு
இயற்கை வளங்களை அரசின் கட்டுப்பாட்டில் வைத்தல், கனிம வளத்துறை
வியாபாரத்தில் ஊழல் முறைகேடுகளை களைந்து அரசுத்துறை மூலம்
செயல்படுத்த வலியுறுத்தப்படும்.
கார்ப்பரேட்டுகளின் வாரா கடன் பட்டியலை வெளியிடுதல், கடன்களை
வசூலித்தல், ரஃபேல் போர் விமான ஊழல், அதானி பங்கு சந்தை மோசடி
பிரச்சனைகளில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடுதல்,
லோக்பால், லோக் ஆயுக்தா சுதந்திரமாக செயல்பட உகந்த சூழலை
உருவாக்குதல் வற்புறுத்தப்படும்.
தேர்தல் பத்திர ஊழலில் ஈடுபட்டோர் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க
வலியுறுத்தப்படும்.
ஹிண்டர்பர்க் ஆய்வறிக்கை வெளிவந்துள்ள பின்னணியில் அதானி
குழுமம் செய்துள்ள முறைகேடுகள் தொடர்பில் நம்பத்தகுந்த விசாரணை
நடத்த வலியுறுத்துவோம்.
தேர்தல் சீர்திருத்தம்

ஒவ்வொரு வாக்கும் முக்கியத்துவம் பெறக் கூடிய விதத்தில் விகிதாச்சார
பிரதிநிதித்துவம் உள்ளிட்ட தேர்தல் சீர்திருத்தங்களை அமலாக்க
வலியுறுத்தப்படும்.
தேர்தல் ஆணையர்கள், நீதிபதிகள் ஓய்வுபெற்ற பின் அரசு
பொறுப்புகளுக்கோ, ஆளுநர், சட்டமன்ற / நாடாளுமன்ற உறுப்பினராகவோ
தேர்வு செய்யப்படுவதை சட்டரீதியாகத் தடுக்க வற்புறுத்தப்படும்.
ஒடுக்குமுறை அகற்றி உரிமை நிலைநாட்ட
பெண்கள், குழந்தைகள், தலித், பழங்குடியினர், சிறுபான்மையினர்,
மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டவர்களின்
நலனைப் பேணுதல்; 33 சதவிகித இட ஒதுக்கீட்டை அடுத்த தேர்தலில்
நடைமுறைப்படுத்த உகந்த நடவடிக்கை எடுத்தல், நுண்நிதி நிறுவனங்களை
முறைப்படுத்தவும், வட்டிக்கு உச்சவரம்பை விதிக்கவும் சட்டம் கொண்டு
வருதல், முதியோர் பாதுகாப்புக்கு மாதம் ரூ.6000 உதவித் தொகை
உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடு, முதியோர் நலனும் கண்ணியமும்
காக்கப்படுவதை உறுதிப்படுத்துவது, ரத்து செய்யப்பட்ட முதியோருக்கான
சலுகைகளை மீட்டெடுத்தல், இயற்கை மரணங்களுக்கு தலா ரூ. 2 லட்சம்
வழங்கும் காப்பீடு திட்டத்தை நிறைவேற்றுவது வலியுறுத்தப்படும்.
நிர்பயா நிதியை அதிகரித்து அது முறையாக செயல்படுத்தப்படுவதை
கண்காணித்தல், பெண்களுக்கான தங்கும் விடுதிகளை ஒன்றிய அரசு
மாவட்டந்தோறும் அமைத்தல், வீடு இல்லாத அனைவருக்கும் வீடு
வழங்குதல் – பெண்கள் பெயரில் அதற்கான உரிமம் வழங்குதல்
வற்புறுத்தப்படும்.
சாதி ஒழிப்பு, சமூக ஒடுக்குமுறை ஒழிப்பு போன்ற நடவடிக்கைகளுக்கான
புறச்சூழலை ஏற்படுத்துதல், சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவித்தல்,
இட ஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்துதல், சாதி ஆணவ குற்றங்களை
தடுப்பதற்கு தனிச்சட்டம் இயற்றுதல், தனியார் துறையில் இட ஒதுக்கீட்டை
கொண்டு வருதல், மனிதக் கழிவை மனிதனே அகற்றும் கொடுமையை
ஒழிக்க இயற்றப்பட்ட சட்டத்தை உறுதியாக செயல்படுத்துதல், துணைத்
திட்ட நிதி முறையாக பயன்படுத்துவதற்கான சட்டம் இயற்றுவது
வலியுறுத்தப்படும்.
விஸ்வகர்ம யோஜ்னா என்ற பெயரில் கொண்டுவரப்பட்டுள்ள
குலத்தொழில் ஊக்குவிப்பு திட்டத்தை திரும்ப பெற குரலெழுப்புவோம்.
சமூகப் பொருளாதார சாதி வாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்திட
வலியுறுத்துவோம்.
ஆதிவாசி மக்களின் வன உரிமைகளை பறிக்கும் வகையில் மோடி
ஆட்சியில் வனப் பாதுகாப்பு சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்கள் ரத்து
செய்யவும், வன உரிமைச் சட்டம் 2006ஐ தீவிரமாக அமல்படுத்தவும்
வலியுறுத்துவோம்.
மலைப்புலையன், ஈரோடு மாவட்ட மலையாளி, குறவன் இனத்தின்
உட்பிரிவினர், குறுமன்ஸ் இனத்தின் உட்பிரிவினர், வேட்டைக்காரன் ஆகிய
இனத்தவரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்துவோம்.
பழங்குடி மற்றும் மலைவாழ் மக்களுக்கு சாதி சான்றிதழ் தடையின்றி
வழங்கிட வற்புறுத்துவோம்.
சிறுபான்மையினர் நலன்
மதச் சிறுபான்மையினரின் உணவு, உடை, வாழ்விடம், தொழில்,
வழிபாட்டு, பண்பாட்டு உரிமைகள் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை
உறுதிபடுத்திட வலியுறுத்துவோம். இதை மறுக்கும் வகையில் பல்வேறு
மாநிலங்களில் பாஜக அரசால் கொண்டு வரப்பட்ட சட்டங்களை திரும்பப்
பெற வற்புறுத்துவோம்.
குடியுரிமை திருத்தச்சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்டவற்றை
ரத்து செய்ய போராடுவோம்.
மோடி அரசால் கைவிடப்பட்ட சிறுபான்மை முஸ்லீம் மாணவர்களுக்கு
வழங்கப்பட்டு வந்த மவுலானா ஆசாத் பவுண்டேஷன் வழியான கல்வி
உதவித் தொகை உள்ளிட்ட அனைத்து கல்வி உதவித் தொகைகளும்
மீண்டும் வழங்கிட குரலெழுப்புவோம்.
சச்சார் குழு பரிந்துரையின்படி முஸ்லீம்களின் கல்வி, வேலை வாய்ப்பு
மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்களை உருவாக்க ஒன்றிய
அரசுக்கு அழுத்தம் தருதல், நீதிபதி ரெங்கநாத் மிஸ்ரா பரிந்துரையின்
பேரில் இட ஒதுக்கீடு வழங்கவும், சமவாய்ப்பு கமிஷன் அமைக்கவும்
அழுத்தம் கொடுக்க வலியுறுத்துவோம்.
வெறுப்பு அரசியலுக்கு முடிவு கட்டுவதோடு மதவெறி தாக்குதலில்
ஈடுபடும் மதவெறியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வற்புறுத்துவோம்.
மாற்றுத்திறனாளிகள் நலன்
ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம் 2016ஐ முழுமையாக அமல்படுத்த
வலியுறுத்தல் – அனைத்து துறைகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5
சதவிகித நிதி ஒதுக்குதல் – மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் நவீன
இயந்திரங்கள் கிடைத்தல் – ஆதரவற்ற பெண் மாற்றுத் திறனாளிகள்
மற்றும் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்பாக
தங்குவதற்கு அரசு பாதுகாப்பு இல்லங்கள் அமைத்தல் வற்புறுத்தப்படும்.
அனைத்து மக்களுக்கும் அரசு நலத் திட்ட பலன்கள் குறிப்பிட்ட
காலத்துக்குள் சென்று சேர, குடிமை சாசனத்தை சட்டபூர்வமாக்க
வலியுறுத்துவோம்.
திருநர்
திருநர்களுக்கு ஒரு சதவிகிதம் கிடைமட்ட இட ஒதுக்கீட்டிற்கான சென்னை
உயர்நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வலியுறுத்துவோம்.
கருத்து சுதந்திரம்
ஊடக சுதந்திரத்தை மீட்டெடுத்தல், யூடியூப் சேனல்கள் உள்ளிட்ட சமூக
வலைதள கருத்துரிமையை சிதைக்கக் கூடிய விதத்தில் கொண்டு
வரப்பட்ட சட்டங்களை திரும்பப் பெறுதல், அரசை விமர்சித்ததற்காக
கருப்புச் சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் வாடும் சமூக
செயல்பாட்டாளர்களை விடுவிக்க குரலெழுப்புவோம்.
மீனவர் நலன்
தேசிய கடல் மீன்பிடிக் கொள்கை 2017, நீலப்புரட்சி திட்டம்
உள்ளிட்டவற்றின் பெயரால் பாரம்பரிய மீனவர்களின் உரிமைகள்
பறிக்கப்படுவதை தடுத்து நிறுத்துதல், கடலோர சமூக மக்களிடம் கலந்து
பேசி கடற்கரை மண்டல மேலாண்மை திட்டத்தை உருவாக்க
வற்புறுத்துவோம்.
இலங்கை கடற்படையால் தாக்குதலுக்கு உள்ளாகும் தமிழக மீனவர்களை
பாதுகாக்க நிரந்தர நடவடிக்கை எடுத்தல், கடலில் காணாமல் போகும்
மீனவர்களை விரைந்து மீட்க “கடல் ஆம்புலன்ஸ்” உள்ளிட்ட தேவையான
திட்டங்களை அமல்படுத்த வலியுறத்துவோம்.
இலங்கை தமிழர்
இலங்கையில் தமிழ் மக்களுக்கு சம உரிமைகள், தமிழ் மொழிக்கு சம
அந்தஸ்து, இலங்கை தமிழ் மக்களிடம் பறிக்கப்பட்ட சொத்துக்கள் மற்றும்
நிலம் மீள் ஒப்படைப்பு செய்திட ஒன்றிய அரசு ராஜிய ரீதியான
நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம்.
இலங்கை உள்நாட்டு போரின் இறுதிக்கட்டத்தில் நிகழ்ந்த மனித உரிமை
மீறல்கள், போர்க்குற்றங்களை விசாரிக்க இலங்கை அரசு சுயேச்சையான
நம்பகத் தன்மையுடனான உயர்மட்ட விசாரணை நடத்த வலியுறுத்துவோம்.
தமிழ்நாட்டில் முகாம்களுக்கு உள்ளேயும், வெளியேயும் ஏதிலிகளாக
வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கிட
குரலெழுப்புவோம்.
மத்தியில் அமைந்த மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு அனைத்து ஜனநாயக, அரசியல் சாசன கட்டமைப்புகளையும் தகர்த்துள்ள நிலையில் அவற்றை புனரமைப்பதும், ஜனநாயகம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி உள்ளிட்ட விழுமியங்களை நிலைநிறுத்துவதும் அவசியமாகிறது. அதற்கு மத்தியில் ஒரு மதச்சார்பற்ற மாற்று அரசு அமைவது அவசியமாகும். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படவும், மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுக்கும் போராட்டங்களுக்கும், முன் வைக்கும் மாற்றுத் திட்டங்களுக்கும் தமிழக மக்கள் பேராதரவு தர வேண்டும் என அன்புடன் வேண்டுகிறோம்.
தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மதுரை, திண்டுக்கல்
தொகுதிகளில் போட்டியிடுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்களுக்கு சுத்தியல், அரிவாள் நட்சத்திரம் சின்னத்திலும், தோழமைக் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அவரவர் சின்னத்திலும் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறச் செய்திட வேண்டுமென தமிழக வாக்காளப்
பெருமக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வேண்டுகிறது.


