கோவையில் பாஜக கூட்டணியில் விரிசல் ; வெளியேறியது பாமக!!
கோவை மக்களவைத் தொகுதியில் தேர்தல் பணிகளில் இருந்து மிகுந்த மனவருத்தத்துடன் வெளியேறுகிறோம் என்று பாமக கோவை மாவட்ட செயலாளர் ராஜ் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமக இணைந்துள்ளது. பாமகவுக்கு 10 மக்களவைத் தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் பாஜகவுடன் கைகோர்த்து பாமகவினர் தொடர்ந்து தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடும் கோவை தொகுதியில் பாஜகவுடன் கைகோர்த்து பாமக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றது. இருப்பினும் கோவை தொகுதியில் பாஜகவினர் தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில் தேர்தல் பணிகளில் இருந்து விலகிக் கொள்வதாக பாமக மாவட்ட செயலாளர் கோவை ராஜ் அறிவித்துள்ளார். வேட்புமனு தாக்கல், தேர்தல் அலுவலகம் திறப்பு என எதற்குமே பாமகவை அழைக்கவில்லை. கூட்டணி தர்மம் முக்கியம்தான், ஆனால், அதைவிட சுயமரியாதை முக்கியம்.கோவை பாஜக தேர்தல் பொறுப்பாளர் கூட்டணி தலைவர்களை மதிப்பதில்லை. இதனால் கோவை மக்களவைத் தொகுதியில் தேர்தல் பணிகளில் இருந்து மிகுந்த மனவருத்தத்துடன் வெளியேறுகிறோம் என கோவை ராஜ் தெரிவித்துள்ளார்.