என்.எல்.சி. நிறுவனத்திற்கு எதிராக நாம் தமிழர் கட்சி போராட்டம் - காவல்துறை அனுமதி மறுப்பு!

 
பிரிவினை மத அரசியலை தவிர்த்திடுவோம்! – சீமான் வேண்டுகோள்

நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்திற்கு எதிராக வருகிற ஆகஸ்ட் 05ம் தேதி நாம் தமிழர் கட்சியின் சார்பில்  நடக்கவுள்ள போராட்டத்திற்கு கடலூர் மாவட்ட காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

என்.எல்.சி. நிறுவனம் 2வது நிலக்கரி சுரங்கம் விரிவாக்கத்திற்காக, கடலூர் மாவட்டம் மேல் வளையமாதேவி பகுதியில் 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தி வருகிறது. இதற்காக நெற்பயிர்கள் நடவு செய்யப்பட்ட வயலில், ஜேசிபி இயந்திரங்களை இறக்கி நெற்பயிர்களை அழித்து, கால்வாய் வெட்டும் பணிகளை தொடங்கியது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  இதனால் அப்பகுதியில் போராட்டம் வெடித்தது. என்எல்சி நிர்வாகத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  நெய்வேலியில் என்எல்சிக்கு எதிராக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமகவினர் முற்றுகை போராட்டம் நடத்திய நிலையில், அது வன்முறையாக மாறியது. இதேபோல் என்.எல்.சி. நிறுவனத்தின் 2வது விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்.எல்.ஏ. தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இவ்வாறு அரசியல் கட்சிகள் என்.எல்.சி நிறுவனத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். 

என்.எல்.சி.

இதனிடையே, நாம் தமிழர் கட்சியின் சார்பில் என்.எல்.சி. நிறுவனத்திற்கு எதிராக வருகிற ஆகஸ்ட் 05ம் தேதி போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் போராட்டத்திற்கு கடலூர் மாவட்ட காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. நெய்வேலி சுற்றுவட்டார பகுதிகளில் தற்போதைய சூழலில் போராட்டம் நடத்தினால் அது சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.