கடலூர் பள்ளி வேன் - ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 3ஆக உயர்வு!
கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் ஏற்கனவே இரண்டு மாணவர்கள் உயிரிழந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் - கடலூர் ரயில் வழித்தடத்தில் செம்மங்குப்பம் என்னும் பகுதியில் ரயில்வே கேட் அமைந்துள்ளது. இன்று காலை 7.45 மணியளவில் இவ்வழியே பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு வந்த தனியார் பள்ளி வேன், திறந்திருந்த ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது அவ்வழியே சிதம்பரம் நோக்கி சென்ற ரயில் பள்ளி வேன் மீது அதிவேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் வேன் பல மீட்டர் தூரத்திற்கு இழுத்துச்செல்லப்பட்டதோடு, வேனில் இருந்த பள்ளி குழந்தைகள் தூக்கி வீசப்பட்டனர். விபத்தில் சிக்கிய பள்ளி வேன் முழுவதுமாக உருக்குலைந்து போயுள்ளது. மாணவர்களில் பேக் மற்றும் பாடப்புத்தகங்கள் ஆங்காங்கே சிதறிக்கிடக்கின்றன.

வேன் ஓட்டுநர் உள்பட 6 பள்ளி குழந்தைகள் வேனில் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த கோர விபத்தில் நிவாஸ்(12) , சாருமதி (16) இரண்டு பள்ளி மாணவர்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தானது சிதம்பரம் - கடலூர் வழித்தடத்தில் வேப்பர்ஸ் குவாரி ரயில் நிலையத்திற்கும் ஆலப்பாக்கம் ரயில் நிலையத்திற்கும் இடையே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. வேன் விபத்துக்குள்ளானதை பார்த்து அவ்வழியே சென்ற அண்ணாதுரை என்பவர், விபத்தில் சிக்கிய மாணவர்களை மீட்பதற்காக சென்போது மின்கம்பி அருந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்துள்ளார்.

காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் செழியன் என்கிற மாணவன் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தற்போது மாணவர் செழியன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து கடலூர் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 2 மாணவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


