பள்ளி சுவர் இடிந்த விபத்தில் உயிரிழப்பு 3ஆக உயர்வு - தமிழிசை , ராமதாஸ் இரங்கல்!!
நெல்லை பொருட்காட்சி திடல் அருகே உள்ள சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது . இதில் 8 ம் வகுப்பு மற்றும் 9ம் வகுப்பு படிக்கும் சஞ்சய், விஷ்வ ரங்சன் ஆகிய 2 மாணவர்கள் உயிரிழந்த நிலையில் படுகாயம் அடைந்த மேலும் 4 மாணவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் நெல்லை சாஃப்டர் மேல்நிலைப் பள்ளியின் கழிவறை சுவர் இடிந்து உயிரிழந்த மாணவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. இரண்டு மாணவர்கள் ஏற்கனவே இழந்த நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மேலும் ஒரு மாணவர் உயிரிழந்தார்.
இந்த சூழலில் நெல்லையில் தனியார் பள்ளியின் கழிவறை சுவர் இடிந்து மாணவர்கள் உயிரிழந்த செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். அதேபோல் பாமக நிறுவனர் ராமதாஸ், நெல்லை டவுன் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளியின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர்; மூவர் காயமடைந்தனர் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன். உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். கழிப்பறை சுவர் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து விசாரித்து தவறு இழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். காயமடைந்தவர்களுக்கு தரமான மருத்துவமும், உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீடும் அரசு வழங்க வேண்டும்! என்று கேட்டுக்கொண்டுள்ளார்.