சொத்து வரி பெயர் மாற்றத்திற்கான கட்டணத்தை 40 மடங்கு உயர்த்த முடிவு - திமுக அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம்!!

 
ops

சொத்து வரி பெயர் மாற்றத்திற்கான கட்டணத்தை நாற்பது மடங்கு உயர்த்த முடிவு செய்துள்ள தி.மு.க. அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சொத்து வரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு, மின் கட்டண உயர்வு என பெருத்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழக மக்களுக்கு மேலும் ஓர் இடியாக சொத்து வரி பெயர் மாற்றக் கட்டணத்தை தி.மு.க. அரசு உயர்த்த முடிவு செய்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாகும். கொரோனா பாதிப்பு முற்றிலும் நீங்கும் வரை சொத்து வரி உயர்த்தப்படாது என்று வாக்குறுதி அளித்த தி.மு.க., கொரோனா தொற்று இன்று வரை இருக்கின்ற நிலையில், ஓராண்டிற்கு முன்பே சொத்து வரியினை 150 மடங்கு வரை உயர்த்தியது. இதனால் வீட்டு உரிமையாளர்களும், வாடகைக்கு குடியிருப்போரும் பெருத்த பாதிப்புக்கு உள்ளானார்கள்.

Ops

இந்தப் பாதிப்பிலிருந்து மீள்வதற்குள், சொத்து வரி பெயர் மாற்றக் கட்டண உயர்வை அறிவிக்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு தி.மு.க. அரசு உத்தரவிட்டுள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. அதாவது, சொத்து வரி பெயர் மாற்றத்திற்கு இதுவரை நிர்ணயிக்கப்பட்டு இருந்த 1500 ரூபாய் வரையிலான நிலைக் கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்படவுள்ளது. தற்போதைய தி.மு.க. அரசு உத்தரவின்படி, சொத்தின் மதிப்பு 5 இலட்சம் ரூபாய் வரை என்றால் 1,000 ரூபாய் என்றும், 10 இலட்சம் ரூபாய் வரை என்றால் 3,000 ரூபாயும், 20 இலட்சம் ரூபாய் வரை என்றால் 5,000 ரூபாயும், 50 இலட்சம் ரூபாய் வரை என்றால் 10,000 ரூபாயும், 1 கோடி ரூபாய் வரை என்றால் 20,000 ரூபாயும், அதற்கு மேல் ஒவ்வொரு ஒரு கோடிக்கும் 20,000 ரூபாயும் செலுத்த வேண்டும். அதாவது 40 மடங்கு கட்டண உயர்வினை தி.மு.க. அரசு அறிவிக்க உத்தரவிட்டுள்ளது. தி.மு.க. அரசின் இந்த நடவடிக்கை வழிப்பறிக் கொள்ளைக்குச் சமம். இது கடும் கண்டனத்திற்குரியது.

ops

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, சொத்து வரி பெயர் மாற்றக் கட்டண உயர்வு குறித்த உத்தரவினை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.