நடுரோட்டில் நிறுத்தப்பட்ட உதயநிதியின் கார்- தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை

 
ச்

திண்டுக்கல்-மதுரை தேசிய நான்கு வழிச்சாலை கொடைரோடு டோல்கேட்டில் மதுரை சென்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.

திண்டுக்கல்லில் திண்டுக்கல்,தேனி மாவட்ட திமுக இளைஞர் அணி மாவட்ட,ஒன்றிய, நகர,பேரூர் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கிய அவர் இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தை முடித்துக்கொண்டு திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் மதுரையில் நடைபெறும் திமுக இளைஞர் அணி  நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மதுரை நோக்கி சென்றார்.

கொடைரோடு டோல்கேட் வந்த போது,அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சகாதேவன், மகேஸ்வரன் கொண்ட குழுவினர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.  அப்போது, உதயநிதி ஸ்டாலின் காரின் பின் பகுதியின் கார் டோரை திறந்து காரில் இருந்த பைகள்,  பேக்குகள் உள்ளிட்டவையை சோதனை செய்தனர்,இந்த சோதனை சுமார் ஐந்து நிமிடம் நடைபெற்றது. காரின் முன்சிட்டில்  அமர்ந்து இருந்த உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பறக்கும்  படையினருக்கு ஒத்துழைப்பு அளித்து வாகனத்தை சோதனை செய்ய அனுமதித்தார். உதயநிதி ஸ்டாலின் காரில் உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி,  திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டப்பேரவை உறுப்பினருமான ஐ.பிசெந்தில்குமார் காரில்  உடன் இருந்தனர். தேர்தல் பறக்கும் படையினரின் சோதனைக்கு பிறகு மதுரை நோக்கி உதயநிதி ஸ்டாலின் கார் சென்றது.