குட் நியூஸ் சொன்ன துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்..! விடுபட்ட அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும்..!
திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு நகராட்சி சுந்தரசோழபுரத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். தொண்டையில் ஏற்பட்ட கட்டு காரணமாக மருத்துவர்கள் ஓய்வு எடுக்கச் சொன்ன நிலையிலும், ஒரு லட்சத்துக்கும் அதிகமான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் முடிவுற்ற கட்டிடங்களைத் திறந்துவைப்பதற்காகவும் அவர் விழாவில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், இந்தியாவிலேயே நீர் நிலைகளில் தன்னிறைவு பெற்ற ஊராட்சியாக திருவள்ளூர் மாவட்டத்தின் பாலபுரம் ஊராட்சி மத்திய அரசின் விருதைப் பெற்றுள்ளதற்குப் பாராட்டுகளைத் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் கடந்த 4.5 ஆண்டுகளில் 20 லட்சம் பேருக்கு வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டதாகவும், முதியவர்களுக்கு வீடுதேடி ரேசன் பொருட்கள் விநியோகிக்கப்படுவதாகவும், கலைஞர் கனவு இல்லம் மூலம் ஏராளமானோர் வீடுகளைப் பெற்றுள்ளதாகவும் கூறினார்.
தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்படும் திட்டங்களைப் பற்றிப் பேசிய உதயநிதி, விடியல் பயணம், காலை உணவுத் திட்டம் உள்ளிட்டவை செயல்படுத்தப்படுவதாகக் குறிப்பிட்டார். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ஐ.டி. கார்டுகள் வழங்கப்பட்டுள்ளதால், அவர்கள் தயாரிக்கும் பொருட்களை அரசுப் பேருந்துகளில் 100 கி.மீ. வரை கட்டணமின்றி எடுத்துச் செல்ல முடியும். இது அவர்களின் லாபத்தை அதிகரிக்கும். முக்கிய அறிவிப்பாக, விடுபட்ட அனைத்துப் பெண்களுக்கும் டிசம்பர் 15-ம் தேதி முதல் மாதம் ₹1000 மகளிர் உரிமைத்தொகை வந்து சேரும் என அவர் உறுதி அளித்தார். பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மாணவர்கள் என அனைத்துத் தரப்பினருக்குமான ஆட்சியாகத் திராவிட மாடல் ஆட்சி திகழ்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.


