திருவண்ணாமலையில் மகா தீபத்தன்று மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை
திருவண்ணாமலையில் மகா தீபத்தன்று மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
உலக புகழ்பெற்ற திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திக தீப திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீப திருவிழா கடந்த 04ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இந்த கொடியேற்ற நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக டிசம்பர் 13ம் தேதி அதிகாலை 4 மணிக்கு மூலவர் சன்னதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மலை மீது மகா தீபமும் ஏற்றப்படவுள்ளது.
இந்த நிலையில், திருவண்ணாமலையில் மகா தீபத்தன்று மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். ஃபெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலையில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் குழு ஆய்வு செய்து அறிக்கை தந்துள்ளதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். பரணி தீபத்திற்கு மட்டும் 300 பேர் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.


