"கணக்கில்லாமல் லஞ்சம் வாங்கும் போலீஸ்" - பட்டியல் போட்டு எச்சரித்த டிஜிபி சைலேந்திர பாபு!

 
சைலேந்திர பாபு

தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து மாவட்ட காவல் தலைமையகங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில் காவலர்கள் எவ்வளவு தொகையை லஞ்சமாக பெறுகிறார்கள் என்ற விவரம் உத்தேசமாக குறிப்பிடப்பட்டு போலீஸாருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை மற்றும் சொத்து தொடர்பான விவகாரங்கள் போன்றவற்றுக்கு ஒரு லட்சம் ரூபாய்வரை லஞ்சம் பெறப்படுவதாக சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

குமரி மண்ணின் சகாப்தம் " சைலேந்திர பாபு "

சட்ட விரோத மதுவிற்பனைக்கு 60 ஆயிரம் ரூபாயும், மணல் கடத்தலுக்கு 30 ஆயிரம் ரூபாயும், சூதாட்டம், விபத்து தொடர்பான வழக்குகளில் 10 ஆயிரம் ரூபாய் வரையும் லஞ்சம் பெறப்படுகிறது. காவல் நிலையங்களில் எழுத்தர் முதல் ஆய்வாளர் வரை, 100 ரூபாய் முதல் லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெறுவது தெரியவந்துள்ளது. எனவே, லஞ்சம் பெற்றுக்கொண்டு சட்டவிரோத செயல்களுக்கு துணை போகும் போலீஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதையடுத்து, அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள், அதிகாரிகள் அனைவருக்கும் இந்த சுற்றறிக்கையை அனுப்பியுள்ளனர்.