தீபாவளி: பேருந்தில் பயணிக்க 70,000 பேர் முன்பதிவு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்ல அரசு பேருந்துகளில் இதுவரை 70 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 9ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை சென்னையில் இருந்து தினசரி இயங்கக்கூடிய 2100 பேருந்துகளுடன் 4, 675 சிறப்பு பேருந்துகள் என மூன்று நாட்களுக்கு சேர்த்து ஒட்டுமொத்தமாக 10975 பேருந்துகளும் பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட மூன்று நாட்களுக்கு 5920 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16,895 பேருந்துகள் இயக்கப்படும். அதேபோல் சென்னையில் மாதவரம், கேகே நகர், தாம்பரம், பூந்தமல்லி உள்ளிட்ட ஐந்து இடங்களில் இருந்து இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்பபடும். மேலும் தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர் பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு 13ம் தேதி முதல் 15ஆம் தேதி வரை தினசரி 2100 பேருந்துகளுடன் 3167 சிறப்பு பேருந்துகளும் மூன்று நாட்களுக்கு சேர்த்து ஒட்டுமொத்தமாக 9467 பேருந்துகள் பிற ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 3825 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 13 ஆயிரத்து 292 பேருந்துகள் இயக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சென்னை உட்பட பல்வேறு நகரங்களிலிருந்து சொந்த ஊர் செல்ல அரசுப் பேருந்துகளில் இதுவரை 70,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். சென்னையிலிருந்து அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் சொந்த ஊர் செல்வதற்கு தற்போது வரை 46,000 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர் என்று தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு 5.90 லட்சம் பேர் அரசு பேருந்துகளில் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.