சாயக்கழிவுகளை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுத்திடுக- விஜயகாந்த்
சாயக்கழிவுகளை முறையாக சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட்டில் சுமார் 100க்கும் மேற்பட்ட சாய மற்றும் தோல் தெழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதில் சில தொழிற்சாலைகள் ஜீரோ டிஸ்சார்ஜ் முறையில் கழிவுநீரை சுத்திகரிக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை மீறி கழிவு நீரை நேரடியாக வெளியேற்றப்படுவதாக தெரிகிறது. இதனால் பெருந்துறை சிப்காட்டை சுற்றியுள்ள குளம், குட்டைகள், வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் மாசுடைந்து மக்கள் அந்த நீரை பயன்படுத்தும்போது புற்றுநோய் போன்ற பலவித நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் சாயக்கழிவு நீரால் அங்கு விவசாயமும் கேள்வி குறியாகியுள்ளது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அப்பகுதி மக்களும், விவசாயிகளும் பலமுறை மனு கொடுத்தும் அதற்கு நிரந்தர தீர்வு காணவில்லை என சொல்லப்படுகிறது. சாய தொழிற்சாலைகளில் இருந்து தினசரி டுவளியேற்றப்படும் கழிவுநீரை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அளவீடு செய்ய வேண்டும். சாயக்கழிவுகளை முறையாக சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றும் தொழிற்சாலைகளுக்கு சீல் வைப்பதோடு, ஆலை உரிமையாளர்களுக்கு கோடிக்கணக்கில் அபராதம் விதிக்க வேண்டும். அப்போதுதான் இந்த விவகாரத்தில் நிரந்தர தீர்வு ஏற்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.