12 மணிநேர வேலை விவகாரம் - முதலமைச்சரை இன்று சந்திக்கும் திமுக கூட்டணி கட்சிகள்

 
mk stalin

12 மணிநேர வேலை மசோதாவை திரும்ப பெற கோரி திமுக கூட்டணி கட்சிகள் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்கவுள்ளனர். 

தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதா சட்டப்பேரவையில் கடந்த 21 தேதி  நிறைவேற்றப்பட்டது.  இந்த நிலையில்  தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை அதிகரிக்கும் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மே 12 ஆம் தேதி தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் அறிவித்துள்ளன. அன்றைய தினம் பேருந்து மற்றும் ஆட்டோக்களை தொழிற்சங்கத்தினர் இயக்கமாட்டார்கள் என்று சிஐடியூ மற்றும் ஏஐடியூசி, எச்.எம்.எஸ் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் சென்னையில்  இன்று கலந்து கொண்ட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வரும் 27 ஆம் தேதி இதற்கான வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர்களின்  உணர்வுகளுக்கு மதிப்பளித்து தமிழக அரசு இந்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்றும் தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 12 மணி நேர வேலை மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 12 மணிநேர வேலை மசோதாவை திரும்ப பெற கோரி திமுக கூட்டணி கட்சிகள் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்கவுள்ளனர். இன்று இரவு 7 மணிக்கு இடதுசாரிகள், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 12 மணி நேர வேலை மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தவுள்ளனர்.