“ஓரணியில் தமிழ்நாடு” உறுப்பினர் சேர்க்கை- கல்லூரிக்கும் கொண்டு செல்ல உத்தரவு
“ஓரணியில் தமிழ்நாடு” உறுப்பினர் சேர்க்கையின் ஒரு பகுதியாக கல்லூரி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொள்ள திமுக மாணவர் அணிச் செயலாளர் ராஜீவ்காந்தி அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ராஜீவ்காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்களின் உத்தரவின்படி; தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்பேரில் கழக மாணவர் அணி சார்பில் கழக மாவட்டந்தோறும் ஓரணியில் தமிழ்நாடு என்ற கழக உறுப்பினர் சேர்க்கை இயக்கம் குறித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள், கல்லூரி மாணவர்களிடையே மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் அமைப்புகளின் மாணவர் அணி நிர்வாகிகள் மூலம் துண்டுப் பிரசுரங்கள் மூலம் விழுப்புணர்வை ஏற்படுத்தும் பரப்புரையை மேற்கொள்வது எனத் தீர்மானிக்கப்பட்டு, தொடக்கமாக ஜூலை 21ஆம் தேதி மாநிலச் செயலாளர் இரா.ராஜீவ்காந்தி கோவை அரசுக் கலைக் கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வுப் பிரசாரத்தைத் தொடங்கி வைக்கிறார்கள்.
இந்தப் பிரசாரத்தைத் தமிழ்நாடு முழுவதும் வாய்ப்புள்ள அனைத்துக் கல்லூரிகளில் கழக மாணவர் அணியின் மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட நிர்வாகிகள் மற்றும் கல்லூரி மாணவர் அமைப்பின் நிர்வாகிகள் அவர்களது தோழர்களுடன் பெருந்திரளாக பங்கேற்று, மேற்கொள்வார்கள் எனத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


